சேற்று நிலமாய்அச் சிற்றூர் விளங்கும்; பகடு தனைப்பூட்டிப் பண்டியில் ஊர்வோர் சகடு தனையிழுக்கத் தாங்குதித்து நிற்பார் 10 சுடுகாடும் அங்கே சுடர்விட்டுக் கண்ணிற் படுமாறு தோன்றிப் படர்வாரை அச்சுறுத்தும்; கள்வர் சிலரும் கரந்து திரிந்திடுவர்; உள்ளின் எவரும் உளம்நடுங்கி வேர்த்திருப்பர்; பாதை கடக்கப் படும்பாடு கண்டவர்தாம் 15 வாதை மறந்து வருவாரோ அவ்வழியில்? அஞ்சல் நிலையம் அமைந்த இடமதுதான் அஞ்சாறு கல்லிருக்கும்; அந்தோ! எனத்தோன்றும்; பிள்ளைப் பருவத்தார் பேணும் அறிவுபெறப் பள்ளித் தலமொன்றும் பார்த்தறியார் அவ்வூரார்; 20 பேருந்து செல்லாப் பெருமை உடையதோர் ஊரந்த ஊரேதான்; யாரங்குச் செல்வார்கள்? கண்ட கதிரேசர் காட்டு வழிதிருத்துந் தொண்டு செயநினைந்தார் தோலா முயற்சியினால் அஞ்சலகம் கல்வி யறிவு தருஞ்சாலை, 25 அஞ்சலின்றிச் செல்ல அழகு தருஞ்சாலை, உந்தூர்தி செல்ல உயர்பாலம் எல்லாமே முந்திவரச் செய்தார் முனைந்து. |