பக்கம் எண் :

148கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

நடங்கண்ட அம்பலத்து நாதனடி
       நண்ணினைநீ எனக்கும் ஆங்கோர்
இடங்கண்டு வை’யென்று கவிமணியார்
       ஏங்கிமனம் பேத லித்தார். 12

ஊரார் புலம்பல்

‘சாவதும் புதுவ தன்றே’
       எனுமொழி சாற்றும் ஊரார்2
பாவமு தூட்டி வந்த
       பண்டிதர் மறைவு கேட்டுக்
கோவென அலறிக் கைகள்
       குவிந்திடத் தொழுது நின்றார்
நாவது வறண்டு போக
       நல்லவர் விம்மி நின்றார். 13

‘பள்ளியைத் திறந்து வைத்தாய்
       பாதையைச் செப்ப னிட்டாய்
ஒள்ளிய பாலங் கண்டாய்
       ஊர்திகள் வரவ ழைத்தாய்
தள்ளியே நின்ற அஞ்சல்
       நிலையமும் தந்தாய்’ என்று
விள்ளவும் இயலா ராகி
       விம்மியே அழுது நின்றார். 14

‘பேசிடும் வழக்கிற் சங்கப்
       பாக்களின் பெருமை யெல்லாம்
பேசிட யாரைக் கண்டு
       பெரும்பயன் பெறுவோம்? தென்றல்
வீசிய அரங்கம் எங்கே
       விளைந்திடக் காண்போம்?’ என்று
பேசிய நாட்டு மக்கள்
       பேருயிர்ப் புயிர்த்து நின்றார். 15


2.பூங்குன்ற நாட்டார்.