பக்கம் எண் :

150கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

17
சிலைகாண் காதை

ஊருக்குச் செய்தநலம் சமயச் சார்பின்
       உயர்வுக்குச் செய்தநலம் தமிழ்வ ளர்த்துப்
பாருக்குச் செய்தநலம் சங்க நூலின்
       பாட்டுக்குச் செய்தநலம் தமிழி னத்தின்
வேருக்குச் செய்தநலம் எனநி னைந்து
       வெளிப்படுமோர் நன்றியினை வடித்துக் காட்டக்
காருக்கு நிகரான வணிகர் கூடிக்
       கதிரேசர் சிலைவடிக்க முடிவு கொண்டார். 1

கலைகண்டார் திறங்கண்டார் தமிழ்மொ ழிக்குக்
       கதியென்றார் அவருருவை வடித்துக் காட்டும்
சிலைகண்டார் ஊர்மக்கள் சிலைதி றக்கச்
       செயல்கொண்டார் விழாவயரும் நாளுங் கண்டார்;
அலைகண்டாற் போலவரும் மக்கள் எங்கும்
       அந்நகரில் திரண்டெழுந்தார்; உவமை யொன்றும்
இலைஎன்றார் அதுகண்டார் மகிழ்வு பொங்கி
       ஈதன்றோ தமிழ்மொழிக்குத் திருநாள் என்றார். 2

தமிழ்நாடு தமிழ்மகனே உன்னை யீன்ற
       தாய்நாடு; குருதியுடன் கலந்து நிற்கும்
தமிழ்நாடு,1 பிறமொழிக்குத் தொழும்ப னாகித்
       தலைகுனிய நாடாதே என்று ரைத்துத்
தமிழ்வாழத் துடிதுடித்த தமிழர் ஆட்சி
       தமிழ்நாட்டில் தலைதூக்கி நின்ற நாளில்
தமிழ்வானிற் கதிரானோர் சிலைதி றக்கத்
       தமிழரசு பேருதவி செய்த தங்கு. 3


1.தமிழை விரும்பு