| | ஒன்னலர் மறைத்தனர்; உறங்கினர் தமிழர். மூவருள் ஒருவன்நின் முன்னோன் இவன்றான் காவிரி நாட்டுக் கோநலங் கிள்ளி; |
இளைஞன் | : | புனையா ஓவியப் பொற்புடைச் செல்வி அனையாள் யாவள்? அரசி போல்வாள் துறவி போலத் தோற்றமேன் கொண்டனள்? |
முதியவர் | : | பெறலருஞ் செல்வப் பேற்றினள்; இவள்தான் குறைவறு கற்பின் கோமகள்; தமிழ்மகள் அறநெறி பிறழா நிறைமனச் செல்வி! |
இளைஞன் | : | பாண்டவர் ஐவர்தம் பத்தினி யோஇவள்? (முதியவர் தம்முள் நகைக்க) ஈண்டென் வினாவிற் கேன்நகை செய்தீர்? |
முதியவர் | : | நன்கு வினவினை; நகையெழா தென்செயும்? தென்புலக் கற்பின் திறமொருங் குணர்த்த வடபுலப் பெண்ணோ வாய்த்தனள்? எனநின் மடமையை யெண்ணி மனத்துள் நகைத்தேன்; கோதறி யாமகள் மாதவி இவள்பேர்! |
இளைஞன் | : | மாதவி யாவிலை மகளவி ளன்றோ? |
முதியவர் | : | கலைமகள் பிறப்பால் விலைமகள் எனினும் விலையிலாக் கற்பின் குலமகள்; கொழுநன் கோவலன் இறந்ததால் கோதை யவளோ யாவுந் துறந்தனள்; அரும்பெறல் மகட்குந் துறவு தந்துபார் தொழும்நிலை தந்தனள்; அறநெறி வழுவா அன்னை யிவளும் ஐவர் இருந்தும் ஆறாம் ஒருவனை விழைந்த அவளும் வேறுவே றியல்பினர்; |
இளைஞன் | ; | பற்பல உண்மைகள் பயனுள பெற்றேன் கற்பன கற்பேன் காப்பன காப்பேன்; |