வழுதி | : | எளிய மெல்லொலி இன்னிசை நயத்தே அளிய என்னுளம் அவாவிற் றைய; |
நாகனார் | : | இனிய போலவும் எளிய போலவும் அணுகு பவைதாம் அடிமை கொள்ளும் நண்ணுவ எவையும் நமதாக் கோடல் உள்ளவை மறத்தற் கொருவழி போலும்; |
குழலி | : | வந்து புகூஉம் வம்பலர் இசையில் உந்தவாக் கோடல் ஒருகுறை கொல்லோ? |
நாகனார் | : | வேற்றவர் இசையை விழைவது தவறிலை ஊற்றமும் ஏற்றமும் உவந்ததற் கீந்து மனத்தை யிழந்து மயக்குறிற் பெரும்பிழை; இனத்தை மொழியை எளிதில் மறந்து வருவிருந் தோம்பும் வாழ்வினர் தமிழர்; பின்னை வருவன பேணுங் காலைத் தன்னை யிழவாத் தகைமை வேண்டும்; புகூஉம் ஒன்றதுள் இரண்டறக் கலத்தல் நகூஉம் நிலையொடு நலிவும் நல்கும்; |
வழுதி | : | : (வாடிய முகத்துடன்) உரிய மறத்தல் வருவ புரத்தல் இரிய மனத்துள் உறுதி கொள்ளுவென்; |
நாகனார் | : | நன்று நன்று; நாளை ஆள்பவர் நன்றுந் தீதும் நவையறத் தெளிதல் உரிமை காத்தற் குறுதுணை யன்றோ? |
| | எப்பொருள் கேட்பினும் எவர்வாய்க் கேட்பினும் அப்பொருட் டன்மை எத்தக வாயினும் எண்ணித் துணிக இளையோய்; அஃதே பண்ணத் தகுநற் பகுத்தறி வென்ப; (வழுதி தலையசைத்து ஓம்புதல் காட்ட) |
குழவி | : | மொழிநலங் காக்கும் முந்தையர் இலக்கண எழிலும் இயல்பும் இயம்புதிர் இனிதே; |