பக்கம் எண் :

இளம்பெருவழுதி209

நாகனார்:மாந்தர் உயர்வும் மானமும் மனத்துள்
ஏத்திப் பொதுநலம் எண்ணி முயலுநர்,
இகழ்ச்சி புகழ்ச்சியென் றிரண்டுங் கொள்ளார்;
பாண்டியன்:நன்றி புலவீர் நம்மகன் வழுதி
மன்றல் குறித்து வரையறை செயாது
பிறபிற பேசினம்; எழிலி குழலி
இருவருள் எவரைத் திருமண மகளாக்
கொள்ளுதும் அதனைக் கூறுக . . . .
நாகனார்:. . . . . . . . . . . . . . . வேந்தே
மருமகள் யாரென மாறன் தேவி
திருவுள மன்றோ தெளிதல் வேண்டும்;
மாதேவி:எழிலி குழலி எவரே யாகினும்
வழுதியின் மனத்தைத் தெளிவுறத் தெரிந்து
செயல்மேற் கொளலே சீர்மைத் தாகும்;
அயலவர் கருத்தை அறிந்து பயனென்?
பாண்டி:கயல்விழித் தேவி கழறிய துண்மை
அவன்றன் கருத்தை அறிய வேண்டின்
புலவர் தாமே பொருத்தம் உடையர்;
நாகனார்:தலைமகன் உளத்தின் தன்மை யறிந்து
நாளை வருதும் நலமே பொலிக
(புலவர்க்குப் பின் அரசனும் அரசியும் தொடர)
ஊழியல் வழுவா ஒண்டொடி யாரொடும்
ஏழடி எம்பின் வந்தனிர் இனிநீர்
ஈண்டிவண் நிற்க ஏகுதும் யாமே.