| பாண்டியன் | : | போரின் நிகழ்வாற் பொருள்கள் பாழென யாரும் அறிகுவர்; யாமும் அஃதே; படையெனும் உறுப்புப் பார்நலங் காக்கும் நடைமுறைக் குரியது; நண்ணார் படையெழிற் செங்கள மன்றி எங்குள தொருவழி? |
| நாகனார் | : | மண்ணாள் வேந்தர் மற்றவர் தம்மை நண்ணார் எனமனத் தெண்ணா ராகின் நண்ணா தாகும் நடுக்கிடும் போரே; போரிற் பாழ்படும் பொருளிற் பாதி பாரில் வாழ்நர்க்குப் பயன்படு மாகில் நல்குர வென்னும் சொல்லே யிலதாம்; |
| பாண்டியன் | : | பாட்டின் கற்பனை கேட்டற் கினியது நாட்டின் காவல் நடைமுறைக் குரியது; |
| நாகனார் | : | பாடல் சொலும்பொருட் பற்றுதல் கொளாஅது கூடலர் எனப்பகை கொளுமேல் யாண்டும் நாடும் ஏடும் நனிவே றாகும்; நாடிய அன்பே நலந்தரும் வாழியாம்; மறப்போர் மறப்போர் மாநிலங் காக்குந் திறத்தோர் அல்லர் செந்தமிழ் வல்லீர் |
| பாண்டியன் | : | மெல்லில் மனத்தைச் சொல்லினம் நும்முழை பல்கிய அறவுரை பகருதிர் நீவிர்; |
| நாகனார் | : | பொலந்தார் மார்ப புகழ்ச்சி வேண்டிக் கலந்தோர்க் குறுதி கழறுதல் தவிர்த்து மெய்ம்மை விடுத்துப் பொய்ம்மை கிளத்தல் எய்யா தாகின் றெம்சிறு செந்நா; |
| பாண்டியன் | : | எம்செவி கைப்பினும் நும்செவி யறிவுறூஉ நெஞ்சிற் கொடூஉம் நீர்மையேம் அறிகுவிர்; |
| | | நனைமொழி நும்பால் நவின்றனம் அவைதாம் தகவில எனின்அவை தவிர்க பெரியீர் |