| பாண்டியன் | : | (புலவரை நோக்கி) தன்மகன் தக்கான் எனப்பிறர் சாற்றில் அன்னை மகிழ்விற் களவிலை; விழிப்புனல் அருவியிற் பெரிதென அறிந்தனம் இன்று; |
| மாதேவி | : | (புலவரை நோக்கி) மகள்புகழ் கேட்ட மன்னர் மனத்துள் துன்னிய மகிழ்வு தோன்றுமா றிலதோ? அரசுறு களிப்பில் அரைப்பங் கெனக்கு முரசொலி முழக்கிலோ முழுப்பங் கவர்க்கு; |
| பாண்டியன் | : | (புலவரை நோக்கி) செங்களம் வெறுக்கும் மங்கைய ருளத்தை இங்கொரு குறிப்பால் இயம்புதல் காண்மின்; பேதையர் கொழுநர்ப் பிரித லாற்றா மாதர் ஆதலின் மகிழ்வவர்க் கேது? |
| மாதேவி | : | வெற்றி தோல்வி வேண்டும் நில்லா; சுற்றிச் சுற்றிச் சுழலுந் தகைய; மாளலும் மீளலும் மற்றோ ரன்ன; மீளுங் காறுங் கேளிர்ப் பிரிந்தோர் மகிழ்வுறல் யாங்ஙனம்? மனத்துட் பெருந்துயர் ஆகும் ஆதலின் அவர்விழி புனல்தரூஉம்; |
| பாண்டியன் | : | மண்டமர் வேட்டு, மாளல் அஞ்சாது புண்டாழ் குருதிப் புனலிற் றிளைத்தல் திண்டோள் மன்னர்க்குத் தண்டா விருப்பாம்; |
| நாகனார் | : | மறப்போர் புரிதல் மன்னர்க் குகந்தது; இறப்போர் தொகையோ எண்கள் இகந்தது; |
| பாண்டியன் | : | இறப்போர் தொகையை எண்ணுவ மாகிற் சிறப்புஞ் சீரும் சேர்வ தியாங்ஙனம்? |
| நாகனார் | : | பொருள்பாழ் உயிர்பாழ் புகையும் பகையால் அருள்பாழ் இந்நிலை யறிவார் யாரே? பெண்மை யுளமேஅப் பெற்றிமை யுணரும்; |