பக்கம் எண் :

28கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

என்று பழநியப்பரையும் அவர் தம்பி அண்ணாமலையையும் பெருமிதம் தோன்றக் குறிப்பிடுகிறார்.

பழநியப்பரின் பண்பு நலங்களை அடுக்கியுரைத்துவிட்டு,

‘கற்றுணர்ந்தார் நல்லுறவும் கலந்தாடிக்
       களிக்கின்ற செவியுணர்வும் வல்லார்வந்து
சொற்றதிரு முறைநூல்கள் செவிமடுத்துச்
       சுவைக்கின்ற புலனுணர்வும் ஒருங்குசேரப்
பெற்றொளிரும் பழனியப்பர்.......’ (3:10)

என்று இயல்மொழியாய் இசைக்கின்றார் முடியரசர். சன்மார்க்க சபையில் கற்றவர்கள் துலக்கமுறக் கற்றதனால் இன்று நாடறிந்த பேராசிரியர்களாய், கவியரசர்களாய்த் திகழ்கின்றமையையும் அவர் எடுத்துரைக்கும்போது, அவரது புகழுரை அவருக்கே சென்று சேர்வதும் புலனாகிறது. அவர் படிக்கிற காலத்தில் , அவருக்கு ஆசிரியராக, வழிகாட்டியாக இருந்த பலரை நினைவு கூர்கின்றார்.

‘நலந்தந்த சங்கரரும் ஆட்டு வித்த
  நடேசருமென் தெய்வங்கள்! நாளும் நாளும்
  வலம்வந்தே அருள்பெற்ற கோவிலுக்குள்
  மல்லிங்க சாமியொரு சாமி எற்குக்
  குலம்தந்த தமிழ்தந்த முத்து சாமி
  கும்பிட்டு நான்மகிழ்ந்து நத்துஞ் சாமி
  உளம்தந்து பாருலகின் இயல்புங் காட்டி
  உய்வித்த செல்லப்பர் மற்றோர் தெய்வம்’ (3:33)

மேலைச்சிவபுரிச் சன்மார்க்கசபை போன்றவை தோன்றி, இளமை முதல் தாய்ப்பால் ஊட்டி வளர்ப்பது போல் தாய்மொழிப் பற்றையும் அறிவையும் ஊட்டி வளர்க்குமானால், இங்கு தமிழ் வளர்ச்சிக்குத் தடைகளே எழா எனலாம். நாடு முழுவதும் இத்தகைய சபைகள் கழகங்கள் எழாவா என்ற ஏக்கத்தைக் கவிஞர் உரை தோற்று விக்கிறது.

‘உள்ளத்துள் உணர்வூட்டிப் பற்றுண் டாக்கி
  உண்மைபெறும் பத்தியுடன் தொண்டு செய்ய
  மெள்ளத்தன் னாளாக்கிப் பாடல் வல்ல
  மேலவர்தம் கூட்டத்துள் ஒருவனாக்கி
  அள்ளித்தன் அருளெல்லாம் என்மேற் பெய்தாள்