பக்கம் எண் :

48கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

இனியநல் லார்வம் விஞ்ச
       இனுஞ்சில தேடிப் பெற்றான்;
கனிவுடன் விளக்கிக் கூறிக்
       கற்பிக்கும் ஆசா னின்றித்
தனிமையில் அனைத்துங் கற்றுத்
       தக்கதோர் புலமை பெற்றான்
தனிமொழி தமிழே யன்றோ
       தனித்திருந் ததனைக் கற்றான் 23

அரும்பிய புலமை யாற்றல்
       அழகிய மொட்டும் ஆகி,
விரும்பிய போதும் ஆகி,
       விளைந்திடும் நறவம் மாந்தச்
சுரும்பினம் மொய்க்கும் வண்ணம்
       தூயநன் மலரும் ஆகி
விரிந்தது; மணமும் சற்றே
       வீசிடத் தொடங்கிற் றங்கே 24

கவர்மணம் நுகர்ந்த மாந்தர்
       களித்தனர் புகழ்ந்து நின்றார்;
அவனெனும் சொல்லை மாற்றி
       அவரென அழைக்க லுற்றார்;
நவையுறு கால்கள் எங்கும்
       நடந்திட இயல வில்லை;
குவிதரும் புகழோ யாண்டும்
       குலவிட நடந்த தங்கே 25

பொறியின்மை கண்டு நெஞ்சம்
       புழுங்கிலர். நாளும் நாளும்
அறிவறிந் தொழுகல் வேண்டி
       ஆள்வினை உடைய ராகி
நெறியிலே நடந்து வந்தார்;
       நிலைபுகழ்க் கலைகள் கற்கும்
குறியிலே குறையா ராகிக்
       கூடிய ஆர்வங் கொண்டார் 26