பக்கம் எண் :

50கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

சாத்திரங் கற்றுத் தேர்ந்த
       1 நாரணன் என்று சாற்றும்
சாத்திரி ஒருவர்க் கண்டார்
       தம்முளக் கருத்தைச் சொன்னார்,
பாத்திரம் ஏற்ற தென்று
       பயிற்றிட அவரும் நேர்ந்தார்;
ஏத்திடும் வண்ணங் கற்றார்;
       இருமொழி வல்ல ரானார் 31

வடமொழிப் பயிற்சி முந்நூல்
       வகுப்பினர்க் குரிய தென்பார்
அடஇது வியப்பே யன்றோ?
       அப்படி மொழிதான் உண்டா?
இடமுடை ஞாலத் துள்ளார்
       எம்மொழி விழைவ ரேனும்
திடமுடன் முயல்வ ராகின்
       தெள்ளிதின் உணர லாகும் 32

துளிர்த்தெழும் ஆர்வம் ஒன்றே
       துணையெனக் கொண்டார்; ஆற்றல்
பளிச்சிடும் வண்ணம் தொன்மைப்
       பழமொழி கற்றுத் தேர்ந்தார்;
அளித்திட ஈட்டு கின்ற
       அக்குடிப் பிறந்த செம்மல்
கொழித்திடுங் கல்விச் செல்வம்
       குவித்தனர் வழங்கு தற்கே 33

அம்மொழி வல்லார் தாமும்
       ஆவென வியந்து நிற்கச்
செம்மையிற் றெளிந்து தேர்ந்து
       செழும்புலம் மிளிரப் பெற்றார்;
எம்மொழி பயின்றா ரேனும்
       1இரும்புலம் பெற்றா ரேனும்
தம்மொழி மறந்தா ரல்லர்
       தமிழராய் வாழ்ந்து நின்றார் 34


1நாரணன் - தருவை நாராயண சாத்திரியர்
இவரிடம் ஐந்தாண்டுகள் கதிரேசர் வடமொழி பயின்றார். 1.பெரும்புலமை.