பக்கம் எண் :

ஊன்றுகோல்57

கல்வியுடன் ஒழுக்கங்கள் பரவிவரக்
       கற்றுணர்ந்த சான்றோராற் பொழிவு செய்தல்,
பல்வகையில் துண்டறிக்கை அவைபற்றி
       அச்சிட்டுப் பலருக்கும் பயன்கொ டுத்தல்,
சொல்வளமை கொண்டிலங்கும் ஆசானைத்
       துணைக் கொண்டு மாணவர்க்குப் பயிற்று வித்தல்,
நல்லுணவும் உறைவிடமும் பயில்பவர்க்கு
       நல்கி உயர் தமிழ்கொடுத்தல் சபையின் நோக்கம், 16

எங்கெங்கே தமிழ்ச்சான்றோர் தமிழ்நாட்டில்
       இருக்கின்றார் அவரெல்லாங் குழுமி வந்து
சங்கங்கள் மொழியாய்ந்த செயல்போலத்
       தமிழாய்ந்து நூலாய்ந்து கண்ட வற்றை
இங்கெங்கள் செவிகுளிர மனங்குளிர
       இனிதளித்தார் மகிழ்வித்தார் ஏற்றந் தந்தார்;
பொங்குங்கள் மலர்மணம்போல் இச்சபையின்
       புகழ்மணமும் பரவிற்றுப் பூமி எங்கும். 17

இலக்கணநூல் வல்லுநரும் இலக்கியநூல்
       சொல்லுநரும் ஆசான்மா ராக நின்று
துலக்கமுற விளக்கமுறப் பயிற்றிய நற்
       றொண்டதனாற் பயன்பெற்றோர் அளவைச் சொல்ல
இலக்கமிலை, பல்கலைசேர் கழகங்கள்
       கல்லூரி பள்ளியெனும் இவற்றி லெல்லாம்
தலைக்கொளும்பே ராசிரியப் பொறுப்பினராய்ச்
       சான்றோராய்க் கவியரசாய்த் திகழு கின்றார். 18

தொடுவதெலாந் துலங்கவைக்குங் குடியில் வந்த
       தொடர்பதனால் பழநியப்பர் தொடங்கி வைத்த
நெடியபுகழ்ச் சன்மார்க்க சபைவ ளர்ந்து
       நிலைத்திருந்து துலங்குவதைக் காணு கின்றோம்;
விடுகதிர்போல் விளங்குகதி ரேசர், நெஞ்சின்
       விழைவிலுரு வானசபைத் தொடர்பால் குன்றில்
இடுவிளக்கின் ஒளிபோலத் தமிழ்நா டெங்கும்
       இசைபரப்பித் தமிழ்பரப்பி விளங்க லுற்றார். 19