பக்கம் எண் :

56கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

கலைமகளின் திருவுளத்துக் குறிப்பறிந்து
       களிநடஞ்செய் திருமகளும் இயங்கி வந்தாள்;
நிலைபெறுமோர் திருப்பணியை நிலையாத
       உலகத்தில் நிகழ்த்துவது நிதிபெற் றார்க்குத்
தலையாய பணியாகும் எனுமுணர்வைத்
       தகுபொழுதில் கதிரேசர் விதைத்து விட்டார்;
கலையாத ஆள்வினையர் பழநியப்பர்
       கருத்துக்குள் முளைத்தெழுந்து கதிர்க்கக் கண்டார். 12

அரசன்சண் முகனார்தாம் தலைமை பெற
       அவ்வூரில் அவையொன்று கூடிற் றாகப்
பரசுபுலஞ் சான்றோரும் வந்திருந்து
       பற்பலநற் கருத்தெடுத்துப் பகர்தல் கேட்டுப்
பரிவுகொடு நன்காய்ந்து பாராட்டும்
       படியாக முடிபொன்று படைத்து நின்றார்;
தரிசுநிலம் விளைநிலமாய்ப் பயனளிக்கச்
       சபையொன்று காண்பதெனத் தீர்வு செய்தார் 13

நன்றாய்ந்து சீர்தூக்கி அவர்கண்ட
       நலம்பயக்கும் முடிபதனால் நானி லத்து
நின்றார்ந்த புகழ்பரப்புஞ் சன்மார்க்க
       சபையொன்று நெடிதோங்கி நிற்கக் கண்டோம்;
வென்றாரும் அறியாத தமிழ்தழைக்க
       விளைநிலம் போற் கல்லூரி யொன்று கண்டார்;
சென்றாரும் எளிமையில்நூல் பயிலுதற்குச்
       செந்தமிழ்நூல் நிலையமொன்றும் தொடங்கி வைத்தார். 14

தமக்காகத் தமிழ்வளர்ப்பார் சிலருண்டு
       தமிழ்காக்கத் தமைவளர்ப்பார் சிலரும் உண்டு
நமக்கோஇவ் வுண்மைநிலை தெரியாது
       நாவலிமை கொண்டவர்தாம் மயக்கி நிற்பர்;
தமிழுக்கே தமிழ்வளர்த்தார் தமைமறந்தார்
       தம்பியையும் பழநியப்பர் பிணைத்துக் கொண்டார்
நமக்காக வாழ்ந்துவரும் பரம்பரையை
       நாளெல்லாம் நினைந்துளத்தால் வாழ்த்து வோமே 15