பக்கம் எண் :

ஊன்றுகோல்55

ஈத்துவக்கும் இன்பத்தை நன்குணர்ந்த
       இயல்புடையார் பலருண்டு செட்டி நாட்டில்;
சேர்த்தமைத்துத் தொகுத்திருந்து காத்துவரும்
       செழுநிதியை வகுத்தளிக்க வல்லார் தம்முள்
வாழ்த்தெடுத்துப் பாடுதற்குத் தகுதியுளார்
       வ. பழ. சா. பழநியப்பர் ஒருவ ராவர்
ஏத்துமவர்க் குடன்பிறந்து பின்னிற்கும்
       இளையவரண் ணாமலையும் ஒருவ ராவர் 8

அடியவர்பால், அருந்தமிழை யுணர்ந்தவர்பால்
       அளப்பரிய பற்றுடையார், அணுகி வந்த
மிடியவர்பால் இரங்குமனம் மிக்குடையார்;
       மேலவரோ டுரையாடி மகிழுங் கொள்கைப்
பிடியுடையார், நெறியுடையார், பிறர்க்குதவும்
       பேறுடையார், சிவமுடையார்; நாளும் இந்த
நடையுடையார் பழநியப்பர்; பின்வந்த
       நல்லவரும் அவ்வணமே ஒழுகி வந்தார் 9

கற்றுணர்ந்தார் நல்லுறவும், கலந்தாடிக்
       களிக்கின்ற செவியுணர்வும், வல்லார் வந்து
சொற்றதிரு முறைநூல்கள் செவிமடுத்துச்
       சுவைக்கின்ற புலனுணர்வும் ஒருங்கு சேரப்
பெற்றொளிரும் பழநியப்பர் பெரிதுவந்து
       பெரும்பொருள்கள் வழங்கிவரும் உணர்வும் கொண்டார்,
பெற்றபொருள் பிறர்மகிழத் தாம்மகிழப்
       பிரிப்பதுதான் இன்பமென உணர்ந்து கொண்டார் 10

சிவநெறியும் பொதுநலமும் செவியுணர்வும்
       சேர்ந்துறையும் பழநியப்பர் வாழும் மேலைச்
சிவபுரிக்குக் கதிரேசர் செலுந்தோறும்
       தெள்ளியரைச் சந்திப்பார் நல்லநல்ல
கவிதருவார் பொருள்தருவார்; சமயத்தின்
       கருத்துரைப்பார்; பழகியஅந் நல்லார் நட்புக்
கவரிலதாய்ச் செறிவினதாய் வளர்ந்ததனால்
       கலைமகளும் திருமகளும் இணையக் கண்டோம் 11