வீமகவி என்பாரைத் தனித்தழைத்து நீதிவழி வெண்பா நூலின் தாமறியும் வழுவனைத்தும் எடுத்துரைத்துத் ‘தமிழுக்குத் தீங்கு செய்யுங் காமமினி வேண்டற்க இத்தொழிலைக் கைவிடுக’ என்று ரைக்க, ஊமையின்முன் மூக்கதனை வருடுங்கால் உறுசினத்தை அவர்தாம் பெற்றார். 12 திருந்தமனங் கொள்ளாராய்த் தேவையிலாச் சினமுற்று, நீதி நூலிற் பொருந்தவழி புகலாத வீமகவி புழுக்கத்திற் கடிமை யானார்; பெருந்திறமை கொண்டிலங்கும் நன்மணியைப் பெருஞ்சொற்கள் பேசி நின்று வருந்தும் வணம் பழிதூற்றத் தலைப்பட்டார்; வருங்காற்றில் மணியார் கேட்டார். 13 நன்செய்நிலத் துறுகளைகள் வளர்வதனால் நலமொன்றும் வாய்ப்ப தில்லை; புன்கவிகள் வளர்வதனால் நற்றமிழ்க்குப் புகழொன்றும் வாய்ப்ப தில்லை; பின்பதனாற் கேடுகள்தாம் சூழுமெனப் பெரும்புலவர் நினைந்தா ராகிச் சின்மொழிகள் மிடைந்ததல புராணத்தின் சீர்கேட்டை விளக்கி விட்டார். 14 மேடைகளில் துணிந்தேறி முழக்கிவரும் வீமகவி பேச்சிற் காணும் சோடைகளை இதழ்களிலே எடுத்தெழுதிச் சொத்தையெனச் சுட்டிக்காட்டப் பாடுவதைக் கண்டஞ்சி வந்தோரும் பதரிதுவென் றுணர்ந்து கொண்டார்; கூடிவருஞ் செல்வமுடன் செல்வாக்குங் குறைந்தனவே வீம ருக்கு. 15 |