பக்கம் எண் :

84கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

சொன்னவெலாம் உண்மையென நம்பிநின்று
       தொண்டுசெயல் தொன்று தொட்டு
மன்னிவரும் இயல்பன்றோ? அவ்வியல்பு
       மாறாத செல்வர் எல்லாம்
பன்னிவரும் வீமகவி சொல்லெல்லாம்
       பலிக்குமென அஞ்சி அஞ்சி
என்னபொருள் கேட்டாலும் அவர்மகிழ
       இலைஎன்னா தீந்து வந்தார் 8

பொருள்பெற்று நலம்பெற்றுப் புவியெங்கும்
       புகழ்பெற்றுக் கலையின் அன்னை
அருள்பெற்றேன் எனவுரைக்கும் வீமகவி
       அங்கங்குத் தலபு ராணம்
மருள்பெற்ற மக்களிடம் பாடிவரு
       மானங்கள் பெருக்கி வந்தார்;
இருளுற்ற உலகத்தில் விழியற்றோன்
       ஏறுநடை போடு மாபோல்! 9

தனக்குரிய தளையன்றிப் பிறதளைகள்
       தட்டாத வெண்பா யாப்பால்
மனக்குரிய நீதிவழி எனும்நூலை
       வடித்தெடுத்துத் தேவ கோட்டைத்
தனப்பெரியார் இரட்டித்த அருசோம
       சுந்தரனார்1 தலைமை ஏற்க
நினைத்தபடி அரங்கேற்ற வீமகவி
       நிகழ்ச்சியினை அமைத்தி ருந்தார். 10

அரங்கேறும் அழைப் பேற்ற நம்மணியும்
       அங்கிருந்தார்; பாடல் கேட்டுத்
தரங்கூற வல்லஇவர் அதுகேட்டுத்
       தலைவலியைப் பொறுத்துக் கொண்டார்;
இரங்காது நிற்பாரோ நற்புலவர்?
       என்செய்வ தெனநி னைந்தே
அரங்கேறி முடிகாறும் அமைதியுடன்
       அவ்வவையில் வீற்றிருந்தார். 11


1.இரட்டித்த அரு - அரு, அரு, சோம. சோமசுந்தரஞ் செட்டியார்.