142 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10 |
என் முன்னை மாணவர்கள், பழைமை நினைந்து, என்பால் அன்பு கொண்டு, எனக்குப் பாராட்டுச் செய்தனர். என் நாளைய நிலையறிந்து, அதன் பொருட்டுப் பத்தாயிரம் திரட்டியும் வழங்கினர். இவர் தம் அன்புக்கு எவ்வாறு நன்றி சொல்வேன்? பெற்ற பிள்ளைகள் செய்ய வேண்டிய ஒன்றை என்பாற் கற்ற பிள்ளைகள் செய்துள்ளனர் எனக் கண்கலங்கி விட்டேன். பின், அடிகளார் தம் முடிப்புரையில் ‘நண்பர் முடியரசன் நாத்திகர் என்று நான் குறிப்பிட்டத்தைப் பற்றிக் கூறினார்கள். ஒருவர் உள்ளத்தை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளாமையால் நேர்ந்து விட்ட தவறு இது. அதனால் உள்ளத்தைப் புரிந்து கொண்டு பழகுவது நன்மை தரும்’ எனக் கூறினார். இந் நிகழ்ச்சியைப் பாராட்டு விழா எனக் கூறுவதை விட உணர்ச்சி விழா என்றே சொல்லலாம். அவையோர் கருத்தும் அது தான். இறுதியில் பழநி, தமது நன்றியுரையில், ‘அண்ணன் முடியரசன் இப் பத்தாயிரத்தையும் நாங்கள் பறித்துக் கொள்வோம் என்றார். உண்மைதான். அண்ணன் கையில் கொடுத்து விட்டால் அது என்னாகும் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் தான் பறித்துக் கொள்கிறோம். நான் வேளாண்குடியிற் பிறந்தவன். அதனால்தான், பறித்து நட்டால் பயன் தரும் என்று கருதிப் பறித்துக் கொள்கிறோம்’ - என்று கூறினார். அடிகளார் உட்பட அனைவரும் கைதட்டி வர வேற்றனர். அவர் கூறியவாறே பறித்துக் கொண்டார். பத்தாயிரத்தில் இரண்டாயிரம் அவர் கைக்கு வந்து சேரவில்லை. மனமிரங்கி ஆயிரம் எனக்குக் கொடுத்தார். எஞ்சிய ஏழாயிரமும் வங்கியில் நடப்பட்டு வளர்ந்து வருகிறது. சென்னையில் மணி விழா எனக்கு அறுபதாம் அகவை நிரம்பியது. அதன் பொருட்டு என் மகள் குமுதமும் மருமகன் பாண்டியனும் எனக்கும் என் துணை வியார்க்கும் புத்தாடைகள் கொணர்ந்து கொடுத்தனர். அவற்றையுடுத்துச் சுவையுணவுகள் உண்டு மகிழ்ந்தோம், மறுநாள் முரசொலியில், ‘இன்று முடியரசன் பிறந்தநாள். மணி விழா அவரில்லத்தில் எளிமையாகக் கொண்டாடப்பட்டது’ என்று |