பக்கம் எண் :

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்195

‘எழுத்தும் அறியார் படிப்பும் உணரார்
கழுத்தில் பிறமொழி கட்டுதல் நன்றோ?’

என்று எதிர்த்துக் கேள்வி போடுகிறாள்.

அவரும் வீரர் பலரும் வியக்கத்தக்க துணிவு காட்டுகின்றனர். கருணை மறவர்களின் செயல்கண்டு நமக்குக் கண்ணீர் அரும்பா நின்றது. இறுதியில் சிறைப்பட்ட பூங்கொடி விடுதலை பெற ஆணை வருகிறது. அந்நேரம் என்ன நடக்கிறது?

‘விடுதலை ஆணைத் திருமுகம் ஏந்தி
நெடுமகன் ஒருவன் நின்றனன் ஆங்கண்;
மருத்துவர் ஆங்கே மனமுவந் தோடி
ஒருத்தியின் முகத்தை உற்று நோக்கினர்
விடுதலை விடுதலை விடுதலை என்றனர்;
உடலெனுஞ் சிறையுள் ஒடுங்கிக் கிடந்து
படுமுயிர் சென்றது விடுதலை பெற்றே’

நம் கண்கள் நீர்முத்துக்களால் மறைக்கப்பட்டு விடுகின்றன. இதயம் நின்று விட்டது போன்ற ஒரு பிரமை உண்டாகின்றது’

ஆண்டுமலர் 1966-67

பேராசிரியர் மது.ச.விமலானந்தம் எழுதிய ‘தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம்’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி;

‘முடியரசன் (துரைராஜ்) கருத்தில் தெளிவு, கவிதையில் துணிவு, உவமையில் புதுமை; உணர்வில் ஆழம், முற்போக்கின் முனைப்பு, சீர்த்திருத்தத்தில் சீர்மை, காதற் குழைவு, அறநெறி ஆர்வம், தத்துவத்துடிப்பு அத்துணையும் மிக்க சத்தான கவிதை வடித்திடும் கவிதைச் சிற்பி. கனல் தெறிக்கும் கவித்துவம்.... ‘பூங்கொடி’ தமிழ் இயக்கப் போராட்ட வரலாற்றினைப் பீடு நடையில் பாடும் தமிழ்த் தேசியக் காப்பியம்’

- தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம்
பக்க 571-572