பக்கம் எண் :

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்51

குன்றில்தான் உணவு. முதல் நாள் சென்ற போது, அடிகளார் வடமொழி கூறி வழிபட்டுக் கொண் டிருந்தார். அஃது என் மனத்தில் எதையோ எழுப்பி விட்டது.

பின்னர் மாணவர் சிலர் உண்டனர்; சிலர் வெளியில் இருந்தனர். ஏன்? என்றேன். வீர சைவ மாணவர் உண்ட பின்னரே பிறர் உண்ணுதல் வேண்டும் என்ற விடை வந்தது. அதுவும் தனியிடத்தில் உண்ணுதல் வேண்டும் என்பது விதி. மறுநாள் முதல்வரைக்கண்டு அது பற்றி உசாவினேன். அவர் என்னைப் புரிந்து கொண்டார். நாள் சில கழிந்ததும் கல்லூரியிலிருந்து விலகி ஊருக்குச் செல்ல ஒப்புதல் கேட்டேன். முதல்வர், ‘உங்கள் உள்ளத்தை அன்றே தெரிந்து கொண்டேன்; நீங்கள் இருக்க மாட்டீர்கள் என்று உணர்ந்தே வருகைப் பதிவேட்டில் உங்கள் பெயரை எழுதவில்லை; நீங்கள் சென்று வரலாம்’ என்று விடை தந்தார். உடனே மேலைச்சிவபுரிக்கு ஓடி வந்து விட்டேன்.

பெரியார் சிக்கனம்

திருச்சி தேவர் மன்றத்தில் 16.7.1944 இல் பதினாறாவது சுய மரியாதை மாநாடு, பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது. வழக்கம் போல் நண்பர்களை அழைத்து மாநாட்டிற்குச் சென்றேன். பகலுணவுக்கு மாநாடு கலைந்தது. அப்பொழுது தந்தை பெரியார் மன்றத்தின் முன் பகுதியில் குடியரசு வெளியீடுகள் விற்பனையாகிக் கொண்டிருந்த இடத்தில் வந்து அமர்ந்து கொண்டார். அருகிற் சென்று அப்பெருமகனார் தோற்றம், செக்கச் சிவந்த மேனி, கூரிய மூக்கு ஒளியுமிழும் விழிகள், வெண்ணிறத்துத் தாடி, அள்ளிச் சுருட்டிப் போட்டுக் கொண்ட மேலாடை இவற்றை யெல்லாம் பார்த்துப் பார்த்து வியந்து நின்றோம். இவர் உலகச்சிந்தனையாளருள் ஒருவர் என்ற எண்ணத்தை, எங்களுக்கு அவர் தோற்றம் உண்டாக்கியது.

கையொப்பச் சுவடியில் பெரியார்தம் கையொப்பம் பெற விழைந்து, என் நண்பர் ஒரு சுவடியை நீட்டினார். அப்பொழுது ஐயா கையொப்பமிடப் பணம் வாங்குவதில்லை. அச்சுவடியைத் திருப்பித் திருப்பிப் பார்த்துவிட்டு ‘இது எவ்வளவு சாமி? ரொம்ப நல்லா இருக்கு!’ என்றார். என் நண்பர் ‘த்ரி ரூபீஸ்’ என்று பெருமிதத் துடன் சொன்னார். ‘பொழைக்கத் தெரியாத பிள்ளை. வெறுங்கை