பக்கம் எண் :

74கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10

உ.வே.சாமிநாத ஐயரைப் பற்றிச் சுப்பிரமணிய ஐயர் பேச இசைந்திருந்தார். ஆனால் அவர் வருகை தந்திலர். ஆதலின் தலைவரே உ.வே.சா.வின் புத்தகப் பதிப்பைப் பற்றிப் பாராட்டிப் பேசினார்.

திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் குறித்துப் ப.இராம நாதப் பிள்ளை விரிவுரை நிகழ்த்தினார். ஞானியாரடிகளின் புலமை, சொல்வன்மை, தூயவாழ்க்கை, பல தமிழறிஞர்களை உருவாக்கியது முதலான செய்திகளை விரித்துரைத்தார். நேரம் மிகுதியாகி விட்டமையால் நான் கூட்டம் முடியுமுன்னர் எழுந்து விட்டேன்.

1948 பிப்பிரவரி நான்காம் நாள் நிகழ்ந்த புலவர் விழாவிற்குச் சென்றேன். விபுலானந்த அடிகள் பற்றி மயிலை. சீனி.வேங்கட சாமி பேசினார். பேராசிரியர் கா.சுப்பிரமணியப் பிள்ளையைப் பற்றியும் பொழிவு நிகழ்ந்தது. சொற்பொழிந்தோர் பெயர் நாள் குறிப்பில் எழுதப்படவில்லை.

பொதுவாக இருவரும் பார்ப்பனீயத்தின் கொடுமைக்கு ஆளான வர்கள் என்றும் கா.சு.பிள்ளை பேராசிரியர் பதவியினின்றும் நீக்கப்பட்டார் என்றும் தந்தை பெரியார், துணைவேந்தராக இருந்த கே.வி.ரெட்டி அவர்களிடம் பரிந்துரை செய்து, மீண்டும் பேராசிரியர் பதவியில் அமர்த்தினார் என்றும் கூறப்பட்டது.

மயிலை சீனி வேங்கடசாமி பேசும்பொழுது, நூல் நிலையத்துக் காக 1500.00 உரூவா விபுலாநந்தர் வேண்டிய பொழுது, அண்ணா மலைப்பல்கலைக்கழகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த பார்ப்பனர் ஒருவர் தடுத்துவிட்டார் என்றும், தமிழர் எழுதிய நூலைப் பாடத் திட்டத்தில் அமைக்க மறுத்துப் பார்ப்பனர் எழுதியதையே பாடமாக வைத்தனர் என்றும் குறிப்பிட்டார்.

அகிலத்தமிழர் மாநாடு

1948 பிப்பிரவரி பதினான்காம் நாள் மாலை, ‘அகிலத் தமிழர் மாநாடு’ நடைபெற்றது. நான் சென்றிருந்தேன். பசுமலை நாவலர். ச.சோமசுந்தரபாரதியார் தலைமை ஏற்றார். அப்பொழுது தமிழ் நாட்டுச் சட்டமன்றப் பேரவைத் தலைவராக இருந்த சிவசண்முகம் பிள்ளையவர்கள், திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைக்க வந்திருந்தார். படத்தைத் திறப்பதன் முன் உரையாற்றினார்.