8 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10 |
திருமணமான ஆண்டே துணைவியாருடன் இந்தி எதிர்ப்புப் போரில் பங்கேற்றார் (1949). சாதி மறுப்பு மணத்தின் தேவையைப் பற்றிக் கவிதை பல பாடியதோடு இருந்து விடாமல் தாமும் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டு, தம் பிள்ளைகள் அனைவருக்கும் அவ்வாறே செய்துவித்துத் தம் கொள்கைக்கு வெற்றி தேடித் தந்ததன் மூலம் 'அரியவாம் சொல்லியவண்ணம் செயல்' என்னும் வள்ளுவன் வாக்கைத் தோல்வியுறச் செய்தார். காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணியேற்றார் (1949). 'என் மூத்த வழித்தோன்றல் முடியரசனே' எனப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனால் பாரட்டப் பெற்றார் (1950). குருதி உமிழும் கொடுநோய்க்கு இலக்காகி, புதுக்கோட்டைத் தமிழ்ப் புரவலர் அண்ணல் பு.அ.சுப்பிரமணியனார் அருட்கொடையால் உயிர் பிழைத்தார் (1955). மூன்றாவது மகவான ஆண் மகவு பிறத்தல், செய்நன்றியின் பொருட்டு, தன்னுயிர் காத்த அண்ணல் சுப்பிரமணியனார் நினைவாக அம்மகனுக்கு 'சுப்பிரமணியன்' எனப் பெயரிட்டார் (1955). 'சுப்பிரமணியன்' என்ற அம்மகன் மறைவு, கவிஞர் பெருந்துயரம் அடைதல் (1959). சென்னை சென்று திரைப்படத்துறையில் ஈடுபட்டார். 'கண்ணாடி மாளிகை' என்ற திரைப்படத்திற்குப் பாடல். உரையாடல் எழுதினார். திரைத்துறையில் சிறுமைகளைக் கண்டு வெறுப்புற்று தம் இயல்புக்கும். கொள்கைக்கும், அத்தொழில் சிறிதும் ஒத்து வராததால் திரைத் துறையிலிருந்து வெளியேறினார் (1961). மீண்டும் காரைக்குடியில் தமிழாசிரியர் பணி (1962). இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டதாகக் காவல் துறையினர் வழக்கு (1965). |