இன்புறுவர். இக்கோலாட்ட நிகழ்ச்சியும் சிறார்க்கே உரியது. பெரியோர் கோலாட்டம் ஆடிற் கண்டு களிப்போர் யாவர்? காட்சிக்கு இன்பந்தான் நல்குமா? சிறு மகார் ஆடின் இன்பக் காட்சியாக விளங்கும். ஆகவேதான், பள்ளிச் சிறார் ஆடி இன்ப மூட்டுகின்றனர். எதிர் எதிராக நேர்வரிசையில் நின்று கோலாட்டம் அடித்து ஆடுவர். வட்டமாக நின்றுகொண்டும் ஆடுவதுண்டு. சிறு சிறு கயிறுகளில் கோலாட்டக் குச்சிகளைக் கட்டிக் கொண்டு பின்னல் கோலாட்டம் என்னும் பெயராலும் ஆட்டம் நிகழும். இவ்வண்ணம் திறமைகளுக்கேற்ற வகையில் இக்கோலாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். செட்டிநாட்டில் செவ்வனே நிகழ்ந்து கொண்டிருந்த இந்நிகழ்ச்சி வரவர அருகிக்கொண்டே வருகிறது. இதற்கு மாறாக கொலு நிகழ்ச்சி எங்கும் பெருகிக்கொண்டே போவதுடன் அமையாது கோவில் களுக்குள்ளும் நுழைந்திருக் கிறது. மற்றொரு நிகழ்ச்சியும் இவ்விழாவில் நிகழ்வதுண்டு. நம் நாட்டுச் சிறுவர்க்குக் கல்விப் பயிற்சி, பெரும்பாலும் புரட்டாசித் திங்களில் இத்திரு நாளிலேதான் தொடங்கும் பழக்கம் இருந்து வந்தது. இந்நிகழ்ச்சியும் காலப் போக்கால் குறைந்துகொண்டே வருகிறது. கல்வி தொடங்கும் இந் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றதுண்டு. குழந்தைகட்குப் புத்தாடை முதலியவற்றால் நன்கு ஒப்பனை செய்து மேளதாளங்களுடன் உற்றார் உறவினர் புடைசூழப் பள்ளிக்கு அழைத்துச் சென்று நல்லாசிரியரைக் கொண்டு எழுத்துப் பயிற்சியைத் தொடங்கி வைப்பர். கல்வி தொடங்குதல் பிள்ளைப் பருவத்திலே நிகழ வேண்டிய செயலே யாகும். ஆதலின் இந் நிகழ்ச்சியும் சிறுவர் களைப் பொறுத்ததே யாகும். இந் நாளில் சிறுவர்க்குக் கல்வி தொடங்கும் பழக்கம் இன்றும் கேரளத்தில் இருந்துவருகிறது. 'துஞ்சத்து எழுத்தச்சன்' என்னும் நல்லாசான் வாழ்ந்த இடம், துஞ்சன் பறம்பு என்னும் பெயரால் வழங்கப்படுகிறது. இது கள்ளிக்கோட்டை ஒலவக் கோடு இருப்புப் பாதையில் உள்ள திரூர் என்னும் தொடர்வண்டி நிலையத்துக்கருகில் அமைந்துள்ளது. முதன் முதலாகக் குழந்தை களுக்குக் கல்வி தொடங்கும் சடங்குக்கு 'எழுத்தினிருத்து' என்று பெயர். அவ் விழாவை இந்தப் பறம்பில் வைத்து நடத்தினால் பலமடங்கு பயன் |