பக்கம் எண் :

76கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

நிகழ்ச்சிக்கு இருநூறு தருவது நிலைய விதிமுறைகளுக்கு ஒத்துவராது. கவிஞரின் இயல்பும் அவர்களுக்குத் தெரியும். கூடிப் பேசி ஒரு முடிவெடுத்துச் 'சரி' என்று எழுதிவிட்டுப் பதிவு செய்து கொள்வ தற்காகப் பாரதி யாரைப் பற்றிப் பேசவும் வேண்டிக்கொண்டனர். கவிஞர் இசைந்து வந்துவிட்டார். கவியரங்க நிகழ்ச்சி முடிந்து, பேச்சும் பதிவாயிற்று. கவிதைக்கும் பேச்சுக்கும் இருநூறு என்பது வானொலி யார் கணக்கு, கவிதைக்கு மட்டும்தான் இருநூறு பேச்சு இலவசம் என்பது கவிஞரின் நினைப்பு, இப்படி உலக நடைமுறையே அறிந்துகொள்ள இயலாத குழந்தையுள்ளம் கவிஞர் உள்ளம். கள்ளங் கவடறியாத குழந்தை யுள்ளத்தில், சூது வாதறியாத தூய உள்ளத்தில்தானே உண்மைக் கவிதை - உயிர்க் கவிதை தோன்ற முடியும்?

காற்றாடியும் கவிதையும்

கவிதையைப் பற்றி என்னிடம் உரையாடிக்கொண்டிருந்த கவிஞர் இப்பொழுது எவனெவனோ கவிதை எழுதுகிறான். 'டீல்' விட ஆசைப்படுகிறான். ஆனால் சின்ன நூல் கண்டை வைத்துக் கொண்டே 'டீல்' விட ஆசைப் படுகிறான். நூல் கண்டு பெரிதாக இருத்தல் வேண்டுமே என்று நினைக்க மாட்டேன் என்கிறான்' என்று கூறினார். இளமையில் காற்றாடிக் கலையில் வல்லவ ராதலின், கவிதை புனைவார்க்கு அந்த உவமை வாயிலாக அறிவுரை கூறியதை எண்ணி வியப்புறுகிறேன். இலக்கியப் படைப்பில் ஈடுபட்டோர்க்கு இது நல்ல அறிவுரை யன்றோ?

பிறரிலும் மேம்பட்ட கவிஞனாகி, வெற்றி வாகை சூட வேண்டு மென்னும் போட்டி மனப்பான்மை உடையவன், நிறைந்த நூலறிவு பெறுதல் வேண்டும் என்று முயலாமல் திரிகிறானே என்று கவலைப்படுகிறார். காற்றாடிக்காரன் வெற்றிபெற நூலளவு மிகுதியாதல் வேண்டும், கவிஞன் வெற்றி பெற நூலறிவு மிகுதி யாதல் வெண்டும் என்று நயம்பட நவின்று ள்ளார். எதிர்ப்புக்கு அஞ்சாத் துணிவுள்ளம், பிறருக்காகப் போராடும் பேருள்ளம், நெஞ்சிற் பட்டதைப் பட்டென்று சொல்லும் நேர்மையுள்ளம், சூதறியாத குழந்தையுள்ளம், சிந்திக்க வைக்கும் சீரியவுள்ளம் முதலியன பாவேந்தரிடத்துக் காணப்படும் உயர் குணங்களாம்.