பக்கம் எண் :

எப்படி வளரும் தமிழ்91

கம்பன் பாடலில் ஈடுபாடு கொண்டோர் சிலர். புறநா னூற்றுக் கருத்தை இக் காலத்தே எள்ளி நகையாடுவதுண்டு. கம்பன் அரசனைக் குறிப்பிடுகையில் 'உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்' எனக் குறிப்பிடுவான். அரசனை உடம் பாகவும் மக்களை உயிராகவும் குறிப்பிடுகின்றான். கம்பன் பற்றாளர், இதனை எடுத்துக்காட்டி, "புறநானூற்றுக் கருத்தைப் புறங் கண்டனன் கம்பன், புரட்சி செய்துவிட்டான் கம்பன்" என்று பெருங்குர லெடுத்துப் பேசுவர். இதிலென்ன புரட்சி கண்டனரோ? தெரிய வில்லை! புறநானூறு, மன்னனை உயிர் என்றது. கம்பனோ உடம்பு என்றனன். உடம்புக்குத் தீங்கு செய்யாது உயிர். உடம்பும் உயிருக்குத் தீங்கு செய்யாது. அவ்வாறே மன்னனும் மக்களும் ஒருவர்க் கொருவர் தீங்கு செய்யக் கருதக் கூடாது என்பது கருத்து. உயிருக்கும் உடம்புக்கும் ஏற்றத்தாழ்வில்லை. அதுபோல அரசனுக்கும் மக்க ளுக்கும் ஏற்றத் தாழ்வில்லை. உயிரும் உடம்பும் இணைந்தால் மாந்தன். அரசனும் மக்களும் இணைந்தால் நாடு. ஒன்றின்றி மற்றொன் றில்லை. மோசிகீரனாரும் கம்பரும் ஒத்த கருத்தினரே. மன்னன் மக்களுக்கும், மக்கள் மன்னனுக்கும் இன்றியமையாதவர் என்பது கருத்து.

கம்பனடியார்கள் கூற்றின்படி கம்பன் கருத்தைப் புரட்சி யென்று ஒத்துக் கொண்டாலும் கம்பனுக்கு முன்பே சாத்தனார் தமது மணிமேகலைக் காப்பியத்தில் இக் கருத்தை வெளிப் படுத்தி விட்டார். ஆதலால், அப் பெருமை சாத்தனார்க் குரியதே யன்றிக் கம்பனுக்குரியதன்று.

மணிமேகலையின்பாற் காமங்கொண்ட உதயகுமரன், அவளைப் பற்றிய எண்ணம் மீதூர அமளியின் மிசைப் பொருந்தா திருந்தான். அவன் முன்தோன்றிய மணிமேகலா தெய்வம் அவனுக்கு அறிவுரை புகல்கிறது. "மன்னனே, தவத்திறம் பூண்ட மணிமேகலையின் மேல் வைத்த உன் எண்ணத்தை ஒழித்துவிடு. ஒழித்திலையேல்,

"மன்னுயி ரெல்லாம் மண்ணாள் வேந்தன்
      தன்னுயிர் என்னும் தகுதி யின்றாகும்" (து.எ.காதை)

என்று அத்தெய்வம் மொழிகிறது. இவ் வரிகளில் மன்னனை உடம்பாகவும் மக்களை உயிராகவும் கூறுகிறார் சாத்தனார். ஆதலின், அப்புரட்சிக் கருத்துக்குரியர் யாவரென எளிதின் அறியலாம்.