பக்கம் எண் :

432மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

அமையட்டும் என்றெல்லாம் இவன் வஞ்சினம் கூறுமிடத்து இவனது நற்பண்புகள் வெளிப்படுகின்றன,1 ஒல்லையூர் என்பது இப்பொழுது உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்த நாடு. இவன் அந்த நாட்டில் நடந்த போரின்போது இவ்விதம் வஞ்சினம் கூறினான். தான் கூறியவாறு ஒல்லையூர் நாட்டை வென்று தன் நாட்டுடன் சேர்த்துக் கொண்டான். ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் என்பவன் இறந்ததற்காகப் பாணர்கள் பெரிதும் வருந்திய செய்தியைக் கூறும் பாடல் ஒன்று உள்ளது.2 இந்தச் சாத்தன் இறந்தது பூதப்பாண்டியன் நடத்திய போரில் நிகழ்ந்திருக்கலாம்.

தமிழ் இலக்கியங்களில் வடக்குப் பகுதியிலுள்ள மலைகளைக் கடந்து பொருள் தேடச் சென்றவர்களைப் பற்றியே மிகுதியாகப் பேசப் படுகிறது. ஆனால், இவன் தமிழக மக்கள் பொதிய மலையைக் கடந்து பொருள் தேடச் சென்ற மக்களைக் குறிப்பிடுவது நினைவுகூரத்தக்கது.3

பொதிமலைப் பகுதியில் திதியன் என்பவன் ஆண்டு வந்ததை இவன் குறிப்பிடுவதோடு, அவனது செல்வச் செழிப்பையும், அவனது அரண்மனையில் முழங்கிய இன்னிசை முழக்கத்தையும் பாராட்டிக் கூறியுள்ளான். இதனால் திதியன் இவனது சிறந்த நண்பன் என்பது தெரிகிறது. இத் திதியன், பாண்டியன் தலையாலங்கானத்து நெடுஞ் செழியனை எதிர்த்துத் தாக்கியது அவர்களது வரலாறுகளில் காணலாம். தலையாலங்கானத்துப் போர், நெடுஞ்செழியன் கொற்கை யில் ஆண்டு கொண்டிருந்தபொழுது நிகழ்ந்ததாகையால் அக்காலத்திலோ, அதற்குச் சற்று முன்னரோ பூதப்பாண்டியன் மதுரையிலிருந்து அரசாண்டான் என்று கூறலாம். ஆரியப் படை கடந்த நெடுஞ்செழிய னுக்குப் பின்னும் தலையாலங்கானத்து நெடுஞ்செழியனுக்கு முன்னும் உள்ள இடைப் பட்ட காலத்தில் இவன் ஆட்சி செலுத்தினான் என்று கூறலாம்.

போரில் வஞ்சினம் கூறியபோது, புறங்காணாவிட்டால் ‘பேர் அமர் உண்கண் இவளினும் பிரிக’ என்று வஞ்சினம் கூறும் அளவிற்கு இவனது அன்பு. மனைவியிடம் சிறந்து விளங்கியது. இவனைப் போலவே இவனது மனைவியும் இவன்மீது பேரன்பு கொண்டு விளங் கினாள். பூதப்பாண்டியன் இறந்தபோது அவளும், அவனை எரித்த தீயில் பாய்ந்து உயிர்துறந்தாள். அவள் பெயர் பெருங்கோப்பெண்டு.4


1. புறம். 71 : 4 - 19

2. ௸ 242

3. அகம். 25 : 20

4. புறம். 246 : 13 - 15