பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - துளு நாடு183

அருந்தெறல் மரபிற் கடவுள் காப்பப்
பெருந்தேன் தூங்கும் நாடுகாண் நனந்தலை
அணங்குடை வரைப்பிற் பாழி                          (அகம்372: 1-3)

பாழி நகரக் கோட்டையில், நன்ன அரசர் பெருநிதியைச் சேர்த்து வைத்திருந்தனர். இதனை,

அணங்குடை வரைப்பிற் பாழியாங்கண்
வேள் முது மாக்கள் வியன் நகர்க் கரந்த
அருங்கல வெறுக்கை                          (அகம்372: 8-5)

என்றும்,

நன்னன் உதியன் அருங்கடிப் பாழித்
தொன்முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த
பொன்                          (அகம்258: 1-3)

என்றும் வருவனவற்றால் அறியலாம். நன்னர், வேள்குல அரசராவர்.

கொடுகூர்

இவ்வூர் துளுநாட்டில் இருந்தது. நன்ன அரசருக்குரிய இவ்வூரைச் சேரன் செங்குட்டுவன் வென்றான் (பதிற்றுப்பத்து 5ஆம் பத்துப் பதிகம்).

வியலூர்

இதுவும் துளு நாட்டில் இருந்த ஊர்.

நறவுமகிழ் இருக்கை நன்னன் வேண்மான்
வயலை வேலி வியலூர்                          (அகம் 97: 12-13)

என்றும் இது கூறப்படுகிறது. இது கடற்கரைப் பக்கமாக இருந்த ஊர். இவ்வூரையும் சேரன் செங்குட்டுவன் வென்றான்.

உறுபுலி யன்ன வயவர் வீழச்
சிறுகுரல் நெய்தல் வியலூர் நூறி
அக்கரை நண்ணிக் கொடுகூர் எறிந்து

(பதிற்றுப்பத்து 5ஆம் பத்து பதிகம்)

என்று கூறுகிறது.

கறிவளர் சிலம்பில் துஞ்சும் யானையிற்
சிறுகுரல் நெய்தல் வியலூர் எறிந்தபின்                          சிலம்பு, நடுகல் 114-115)