பக்கம் எண் :

212மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 3

நெடுஞ்சேரலாதன் இறந்த பிறகு அவன் மகனான நார்முடிச் சேரல் சேரநாட்டையரசாண்டான். நார்முடிச்சேரல் அதிகமான் நெடுமிடல் என்பவனை வென்றான் என்று பதிற்றுப்பத்து (4ஆம் பத்து 2:10) கூறுகிறது. நார்முடிச் சேரல் வென்ற நெடுமிடல் என்பவனைப் பரணருங் கூறுகிறார். பசும்பூண் பாண்டியனின் சேனாபதி அதிகமான் நெடுமிடல் என்றும் அவனை அவனுடைய பகைவர்அரிமணவாயில் உரத்தூர் என்னும் ஊரில் வென்றனர் என்றும் (அகம் 266:10-14), பிறகு அவன் துளு நாட்டு வாகைப் பறந்தலைப் போரில் இறந்து போனான் என்றும் (குறுந்.393: 3-6) அவன் நன்னன் (இரண்டாவன்) உடைய சேனாபதியாகிய மிஞிலியால் கொல்லப்பட்டான் என்றும் கூறுகிறார் (அகம் 142: 9-13).

நார்முடிச் சேரலின் சேனாபதியாகிய வெளியன் வேண்மான் ஆய்எயினன் என்பவன் நன்னன் (இரண்டாவன்) உடைய சேனாபதி யாக மிஞிலியால் கொல்லப்பட்ட செய்தியையும் பரணர் கூறுகிறார் (அகம் 148: 7-8, 181:4-7, 208: 5-9, 396: 2-6).

இதனால், பரணர் நார்முடிச்சேரல், அதிகமான் நெடுமிடல், நன்னன் இரண்டாவன், அவனுடைய சேனாதிபதி மிஞிலி ஆகியோர் காலத்தில் இருந்தவர் என்பது தெரிகின்றது.

நெடுஞ்சேரலாதனின் இரண்டாவது மகனும் நார்முடிச் சேரலின் தம்பியுமாகிய சேரன் செங்குட்டுவனைப் பரணர் பதிற்றுப்பத்து 5ஆம் பத்துப் பாடினார். அதில் செங்குட்டுவனுடைய ஆட்சியின் முற்பகுதி நிகழ்ச்சிகளை மட்டும் கூறுகின்றார். செங்குட்டுவன் கடலில் சென்று கடற்போர் செய்து குறும்பரை அடக்கியதையும் மோகூர் மன்னனை வென்றதையும் சிறப்பித்துக் கூறுகிறார்.

(செங்குட்டுவன் காலத்துப் பிற்கால நிகழ்ச்சிகளான மைத்துன வளவனுக்காக ஒன்பது சோழரை வென்றதும் கங்கைக் கரையில் கனக விசயரை வென்று சிறைப்பிடித்ததும், கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்ததும் முதலிய பிற்கால நிகழ்ச்சிகளைப் பரணர் 5ஆம் பத்தில் கூறவில்லை. எனவே, இந்நிகழ்ச்சிகள் நிகழ்வதற்கு முன்னே 5 ஆம் பத்துப் பாடினார் என்பது தெரிகிறது)2

நன்னன் மூன்றாவனாகிய நன்னன் உதியனைப் பரணர் தம் செய்யுளில் கூறுகிறார். (அகம் 258:1.3) எனவே பரணர், செங்குட்டுவன், நன்னன் மூன்றாவன் காலத்திலும் இருந்தவர் என்பது தெரிகின்றது.