பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு29

‘முள் எயிற்றுப் பாண்மகள் இன்கெடிறு சொரிந்த
அகன்பெரு வட்டி நிறைய மனையோள்
அரிகால் பெரும்பயறு நிறைக்கும்’

(ஐங்குறு, மருதம், புலவிப்பத்து, 47)

(பாண்மகள் - பாணர் பெண்; கெடிறு - கெளுத்தி மீன். மனையோள் - குடியானவன் மனைவி)

‘வலைவல் பாண்மகன் வாலெயிற்று மடமகள்
வராஅல் சொரிந்த வட்டியுள் மனையோள்
யாண்டுகழி வெண்ணெல் நிறைக்கும்’.

(ஐங்குறு, மருதம், புலவிப்பத்து, 48)

(வராஅல் - வரால் மீன். ஆண்டுகழி வெண்ணெல் - ஒரு ஆண்டு பழமையான நெல்)

‘அஞ்சில் ஓதி அசைநடைப் பாண்மகள்
சின்மீன் சொரிந்து பன்னெற் பெரூஉம்’

(ஐங்குறு, மருதம், புலவிப்பத்து 49)

கடற்கரையைச் சார்ந்த உப்பளங்களில் நெய்தல் நிலமக்கள் உப்பு விளைத்தார்கள். உப்பு வாணிகர் மாட்டு வண்டிகளிலே நெல்லைக் கொண்டுவந்து கொடுத்து உப்பை மாற்றிக்கொண்டு போனார்கள் என்று நற்றிணைச் செய்யுள் கூறுகிறது.

‘தந்நாட்டு விளைந்த வெண்ணல் தந்து
பிறநாட்டு உப்பின் கொள்ளை சாற்றி
... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ...
உமணர் போகலும்’.

(நற்றிணை. 183)

(தந்நாடு - உப்பு வாணிகரின் மருதநிலம். பிறநாடு - உப்பு விளையும் நெய்தல் நிலம். உமணர் - உப்புவாணிகர்.)

நெய்தல் நிலத்து முதுமகள் ஒருத்தி தன் உப்பளத்தில் விளைந்த உப்பை மாற்றி நெல் கொண்டுவரச் சென்றாள் என்று கல்லாடனார் கூறுகிறார். ‘ஆயும் உப்பை மாறி வெண்ணெல் தரீஇய உப்பு விளை கழனிச் சென்றனள்’?(குறும். 269: 4-6)

(ஆய் - அன்னை, தாய். தரீஇய - கொண்டுவர)