பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு63

மாலுமி, பருவக்காற்றின் உதவியினால் முசிறித் துறைமுகத்துக்கு நேரே நடுக்கடல் வழியாக விரைவில் பிரயாணம் செய்யும் இரகசியத்தைக் கண்டுபிடித்தான். அது முதல் யவனக் கப்பல்கள் விரைவாகவும் அதிகமாகவும் சேரநாட்டு முசிறித் துறைமுகத்துக்கு வந்து சென்றன. அந்தப் பருவக் காற்றுக்கு யவனர், அதைக் கண்டுபிடித்தவன் பெயராகிய ஹிப்பலஸ் என்னும் பெயரையே சூட்டினார்கள். ஹிப்பலஸ் பருவக்காற்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகு யவனக் கப்பல்கள் நேராகத் தமிழ்நாட்டுத் துறைமுகப் பட்டினங்களுக்கு வந்தன. அதனால் யவனக் கப்பல் வாணிகம் பெருகிற்று. இந்தக் கடல் வாணிகம் கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையில் நடந்தது. கி.மு. முதல் நூற்றாண்டின் தொடக்கத்தில் உரோம் சாம்ராச்சியத்தை யரசாண்ட அகஸ்தஸ் சீஸர் அரசன், யவன - தமிழர் வாணிகத்தை விரிவுபடுத்தினான். உரோமாபுரி அரசர்களின் உருவ முத்திரை இடப்பட்ட பழைய நாணயப் புதையல்கள் தமிழ்நாட்டில் சில இடங்களில் சமீப காலத்தில் பூமியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டன. அந்தப் பழங்காசுகள் சங்க காலத்தில் நடந்த தமிழர் - யவனர் வாணிகத் தொடர்புக்குச் சான்று பகர்கின்றன. அக்காலத்தில் நடந்த தமிழர் யவனர் வாணிகத் தொடர்பைப் பற்றிப் பிளைனி, தாலமி முதலான யவனர்கள் எழுதிய நூல்களிலிருந்து அறிகிறோம். ஒரு யவனர் கிரேக்க மொழியில் எழுதிய செங்கடல் வாணிகம் என்று பெயருள்ள ஒரு நூல் உண்டு (Periplus of the Erythraei) அதை எழுதியவர் பெயர் தெரியவில்லை. அந்நூலில் தமிழ்நாட்டுத் துறைமுகங்களில் யவன வாணிகர் செய்த வாணிகத்தைப் பற்றிக் கூறப் படுகிறது. உரோம் சாம்ராச்சியத்தையாண்ட அகஸ்தஸ் சக்கரவர்த்திக்கு மதுரை யிலிருந்து ஒரு பாண்டியன் தூது வரையனுப்பினான்.

வாணிகத்தின் பொருட்டு வந்த யவனர் துறைமுகங்களுக்கு அருகில் தங்கியிருந்தார்கள். ஏற்றுமதி இறக்குமதி முடிந்தவுடன் அவர்கள் திரும்பிப் போய்விட்டார்கள். யவனர் சிலர் தமிழ் நாட்டிலே தங்கித் தொழில் செய்தார்கள். அவர்கள் தச்சுத் தொழிலில் தேர்ந்தவர்கள். “யவனத் தச்சர்” என்று மணிமேகலை (19:108) கூறுகிறது. புதுச்சேரிக்குத் தெற்கே (அரிக்கமேடு என்னும் இடத்தில்) இருந்த யவனப் பண்டக சாலையில் யவனத் தொழிலாளிகள் சிலர் கண்ணாடி மணிகளைச் செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள் என்று அங்கு நடந்த அகழ்வாராய்ச்சியினால் தெரிகிறது.