பண்டைத் தமிழகம் ஆவணம் - பிராமி எழுத்துகள் - நடுகற்கள் | 99 |
இவ்வாறு பொருள் கூறுகிறார். “நந்த ஸிரி குபேர (நந்த ஸ்ரீயக்ஷ) என்னும் சோதிடனால் கொடுக்கப்பட்ட பொன்னைக் கொண்டு” இந்தப் பள்ளி அமைக்கப்பட்டது என்று முடிக்கிறார். இந்தப் பிராமி எழுத்து வாசகத்தையும் இதன் பொருளையும் நாம் ஆராய்வோம். “காணி ய் நாந்தா ஸிரிய்கு அன தமாம் ஈதா நெடிஞ் சாழியான் ஸாலாகான் ஈளஞ் சாடி கான் தாந்தைய் சடிகான் செ ஈ யா பா ணி ய்” இதில் சில எழுத்துக்கள் நெடிலாக எழுதப்பட்டுள்ளன. பட்டிப் பரோலு கல்வெட்டின் வாய்பாடுப்படி,12 நெட்டெழுத்துக்களைக் குற்றெழுத்தாக அமைத்துப் படித்தால் இதன் வாசகம் இவ்வாறு அமைகிறது : “கணிய் நத்தஸிரிய்கு அன தமம் ஈதா நெடிஞ்சழியன் ஸலகன் ஈளஞ் சடிகன் தந்தைய் சடிகன் செஈய பளிய்” இதன் பொருளைக் கூறுவதற்கு முன்பு இதிலுள்ள சொற்களை விளக்கிக் கூற வேண்டும். கணிய்-ஈற்றில் யகரமெய் சேர்த்து எழுதப்பட்டுள்ள இந்தச் சொல்லின் சரியான வாசகம் கணி என்பது. இகர ஈற்றுச் சொற்களின் இறுதியில் யகரமெய் சேர்த்து எழுதுவது அக்காலத்து வழக்கம். கணி என்பதன் பொருள் வான நூலை அறிந்தவர் (கோள்களைக் கணிப்பவர்) என்பது. கணியன் பூங்குன்றனார் என்னும் பெயரைக் கருதுக. கணியன் பூங்குன்றனார் நற்றிணை 226ஆம் செய்யுளையும் புறம்.192ஆம் செய்யுளையும் பாடியவர். இந்தக் கல்வெட்டில் கூறப்படுகிற கணி என்பவர் வானத்திலுள்ள கோள்களைக் கணிப்பவர். நந்தஸிரிய்கு என்பது தவறாகக் கற்றச்ச னால் எழுதப்பட்டுள்ளது. இதன் சரியான சொல் நந்தியாசிரியற்கு என்றிருக்க வேண்டும். நந்தியாசிரியர் என்பது இந்தக் குகையில் வசித்த முனிவரின் பெயர். அவர் வான நூலைக் கணிக்க வல்லவர் ஆகையால் ‘கணிந்தியாசிரியர்’ என்று கூறப்பட்டார். |