| தமிழகக் கலை வரலாறு - சிற்பம் - கோயில் | 117 |
என்றும், “மாவாய்ப் பிளந்துகந்த மாலுஞ் செய்ய   மலரவனுந் தாமேயாய் நின்றார் போலும் மூவாத மேனி முதல்வர் போலும்   முதுகுன்ற மூதூ ருடையார் போலும்.”7 என்றும், “மூவன்காண் மூவர்க்கும் முதலா னான்காண்   முன்னுமாய்ப் பின்னுமாய் முடிவா னான்காண்.”8 என்றும் சைவ அடியார் கூறுவது காண்க. மும்மூர்த்தி குகைக் கோயிலைச் சார்ந்து, அதன் பக்கத்தில் உள்ள பாறையில் கொற்றவையின் (துர்க்கையின்) உருவம் அழகான புடைப்புச் சிற்பமாக அமைக்கப் பட்டிருக்கிறது. இதைப்பற்றிக் “கொற்றவை” என்னும் தலைப்பில் எழுதியுள்ளேன். “அர்ச்சுனன் இரத”த்தில் உள்ள சிற்பங்கள் மேற்குப்புறம் பார்த்த இந்தக் கோயிலின் திருவுண்ணாழிகையில் (கருவறையில்) சிற்ப உருவங்கள் இல்லை. வெளிப்புறச் சுவரில் அழகான சிற்ப உருவங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. வடக்கு கிழக்கு தெற்குப் புறச்சுவர்கள் ஒவ்வொன்றிலும் ஐந்து கோட்டங்கள் வகுக்கப்பட்டு, ஒவ்வொரு கோட்டத்திலும் ஒவ்வொரு உருவங்கள் புடைப்புச் சிற்பமாக அமைக்கப் பட்டுள்ளன. இச் சிற்பங்களைப் பார்ப்போம். 20. கருடவாகனப் பெருமாள் : வடபுறச் சுவரில் நடுநாயக மாக இருக்கும் சிற்ப உருவம் கருடவாகனப் பெருமாள். இந்தச் சிற்பம் அழகாகவும் புதுமையாகவும் இருக்கிறது. கருடாழ்வான் குனிந்து நின்று பெருமாளைத் தாங்குகிறான். வலது காலைப் பின்னால் மடக்கி, இடது காலை முன்புறம் ஊன்றி, இடது கையை இடது கால் முட்டி மேல் தாங்கிக் குனிந்து நின்று, வலக்கை விரலால் வாயைப் பொத்திக் கொண்டு பயபக்தியோடு தாழ்ந்து நிற்கும் கருடாழ்வானின் காட்சி இனிய காட்சியே. பிற்காலத்துக் கருடாழ்வான் உருவச் சிற்பத்தை இக்காலத்தில் பார்க்கிறோம். மனித உடம்பும் கருடப் பறவையின் |