பக்கம் எண் :

தமிழகக் கலை வரலாறு - சிற்பம் - கோயில்279

விரும்பும் இடங்களுக்கு அவனைத் தூக்கிச் செல்ல ஒரு இயக்கனை ஊர்தியாக கற்பித்தார்கள். அந்த இயக்கனுடைய பெயர் நான் என்பது. ஆகவே குபேரனுக்கு நரவாகனன் என்னும் பெயரும் உண்டு. குபேரன் திக்கு பாலகர்களில் ஒருவன்.

“இருநிதிக் கிழவன் இயக்கர் வேந்தன்
வடதிசைத் தலைவன் நரவாகனனே”

என்று பிங்கல நிகண்டு குபேரனைக் கூறுகிறது.

குபேரனுடைய நிதிகளுக்கு அளவில்லை. அவனுடைய நிதிகள் வளர்ந்து கொண்டேயிருக்கின்றனவாம். நெல் வயலில் ஆண்டு தோறும் நெல் விளைவது போல. குபேரனுடைய தோட்டத்தில் சங்க நிதியும் பதுமநிதியும் விளைகிற கொடிகள் உள்ளனவாம்! சங்கும் தாமரையும் நீரில் விளையும் பொருள்கள் அல்லவா? குபேரனுடைய தோட்டத்துக் குளங்களில் சங்க நிதிகளும் பதும (தாமரை) நிதிகளும் வளர்ந்துகொண்டே இருக்கின்றனவாம்! (இச்செய்தியைத் தக்கயாகப்பரணி (காளிக்குக் கூளி 195) கூறுகிறது).

நிதியின் கிழவனான குபேரன். சிவபெருமானின் தோழன் என்று திருநாவுக்கரசர் கூறுகிறார்.

“நதியாருஞ் சடையானை நல்லூரானை
     தள்ளாற்றின் மேயானை நல்லத்தானை
மதுவாரும் பொழில் புடைசூழ் வாய்மூரானை
     மறைக்காடு மேயானை யாக்கூரானை
நிதியாளன் தோழனை நீடூரானை
     நெய்த்தானம் மேயானை யாரூ ரென்னும்
பதியானைப் பள்ளியின்முக் கூடலானைப்
     பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.”

(திருப்பள்ளியின் முக்கூடல் - திருத்தாண்டகம் 7)

“முத்தனைய முகிழ் முறுவனுடையார் போலும்
மொய்பவளக் கொடியனைய சடையார்போலும்
எத்தனையும் பத்தி செய்வார்க் கினியர் போலும்
இருநான்கு மூர்த்திகளு மானார் போலும்
மித்திர வச்சிரவணற்கு விருப்பர் போலும்