பக்கம் எண் :

168மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15

‘ஈரித ழிணர்நீல மிடைதெரியா தரிந்திடூஉம்
ஆய்கதி ரழற்செந்நெ லரியே யாதே
ஆய்கதி ரழற்செந்நெ லகன்செறுவி லரிந்திடூஉங்
காவிரி வளநாடன் கழலே யாதே
காவிரி வளநாடன் கழல்சேர் மன்னர்க்
காரர ணிற்ற லரிதே யாதே’

எனவும்,

‘நித்திலங் கழலாக நிரைதொடி மடநல்லார்
எக்கர்வா னிடுமண லிணரே யாதே
எக்கர்வா னிடுமண லிணர்புணர்ந் திசைந்தாடும்
கொற்கையார் கோமானே கொடியே யாதே
கொற்கையார் கோமான் கொடித்திண்டேர் மாறற்குச்
செற்றர ணிற்ற லரிதே யாதே’

எனவும் இத்தொடக்கத்தன முப்பேட்டுச் செய்யுளும் ஆறடியான் மிக்கன வேனும் ஒருபுடை யொப்புமை நோக்கிக் கலிவிருத்தத்தின்பாற் படுத்து வழங்கப்படும்.”

முப்பேட்டுச் செய்யுள் சேர, சோழ, பாண்டியர்மீது இயற்றப்பட்ட நூலெனத் தோன்றுகிறது. இந்நூலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

65. மூவடி முப்பது

மூவடி முப்பது என்னும் ஒரு நூல் இருந்ததென்பதைப் பேராசிரியர் உரையினால் அறிகிறோம். தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுளியல், 236ஆம் சூத்திர உரையில் பேராசிரியர் இந்நூலைக் குறிப்பிடுகிறார். அவர் கூறுவது இது:

“மற்று மூவடி முப்பது முதலாயின அம்மையெனப்படுமோ அழகெனப்படுமோ வெனின், தாய பனுவலின்மையின் அம்மை யெனப்படாவென்பது. இவற்றுள்ளும் ஓரோர் செய்யுட்கண்ணே மாத்திரை முதலாகிய உறுப்பும் ஏற்ற வகையான் வருவன அறிந்துகொள்க.”14

66. வாசுதேவனார் சிந்தம்

யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் இந்நூலைத் தமது உரையில் குறிக்கிறார். யாப்பருங்கலம், செய்யுளியல், 40ஆம் சூத்திர விருத்தியுரையில் கீழ்க்காணுமாறு எழுதுகிறார் :