பக்கம் எண் :

மறைந்துபோன தமிழ் நூல்கள்215

பெயரால், பிற்காலத்திலிருந்த புலவர் சிலர் சில நூல்களை இயற்றி வைத்தனர் என்பது ஆராய்ச்சியினால் தெரிகிறது. அத்தகைய நூல்களில் இதுவும் ஒன்று என்று தோன்றுகிறது. ஆனால், அகத்தியர் பாட்டியல் என்னும் பெயரால் ஒரு நூல் வழங்கிவந்தது என்பதில் ஐயமில்லை. இந்நூலிலிருந்து இரண்டு சூத்திரங்கள் பன்னிரு பாட்டியல் என்னும் நூலில் தொகுக்கப் பட்டுள்ளன. அவை :

குறிலைந் துடனெடில் கூட்டி நின்ற
ஐ ஒள விரண்டும் இ உ வடக்கிப்
பால குமார வரசு மூப்பு
மரணமென் றைவகைத் தானம் வகுத்தனர்.     1

முன்பிற் செய்யுண் முதலெழுத் ததற்குப்
பொருத்தமும் விருத்தமும் பகையுங் கொளலே.     2

3. அணியியல்

அணியியல் என்பது தண்டியலங்காரத்திற்கு ஒரு பெயராக வழங்கிவந்தது. இங்குக் கூறுகிற இந்த அணியியல், தண்டியலங் காரத்தின் வேறுபட்ட ஒரு பழைய நூல். இந்த அணியியல் நூலிலிருந்து சில சூத்திரங்களை யாப்பருங்கல உரையாசிரியரும் நேமிநாத உரை யாசிரியரும் மேற்கோள் காட்டுகின்றனர்.

யாப்பருங்கல விருத்தியுரைகாரார் இந்நூலைப் பற்றிக் குறிப்பிடுவன வருமாறு :

“இனி அகவல் வெண்பாவாவது இன்னிசை வெண்பா என்னை?

‘அகவல் வெண்பா வடிநிலை பெற்றுச்
சீர்நிலை தோறுந் தொடைநிலை திரியாது
நடைவயி னோரடிநேய முடைத்தாய்ப்
பொருளொடு புணர்ந்த வெழுத்தறி யாதே.’

என்றாராகலின்.

வரலாறு:

‘வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகற்றம் வாழ்நாண்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.’