| 216 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
இஃது அகவல்வெண்பாவென்று அணியியலுடையார் காட்டிய பாட்டு.” (யாப்பருங்கலம்., செய்யுளியல்., 4ஆம் சூத்திர உரை மேற்கோள்) யாப்பருங்கலம், ஒழிபியல், “மாலைமாற்றே சக்கரஞ் சுழி குளம்” என்னும் சூத்திரத்தில் ‘உருவகமாதி விரவியலீறா வருமலங் காரமும்’ என்னும் பகுதிக்கு உரை கூறும்போது இவ்வாறு கூறுகிறார் : “உருவகமும், உவமையும், வழிமொழியும், மடக்கும், தீபகமும், வேற்றுமை நிலையும், வெளிப்படை நிலையும், நோக்கும், உட்கோளும், தொகைமொழியும், மிகைமொழியும், வாத்தையும், தன்மையும், பிற பொருள் வைப்பும், சிறப்பு மொழியும், சிலேடையும், மறுமொழியும், உடனிலைக் கூட்டமும், நுவலா நுவற்சியும், உயர் மொழியும், நிதரிசனமும், மாறாட்டும், ஒருங்கியன் மொழியும், ஐயமும், உயர்வும், விரவியலும், வாழ்த்தும் என்றோதப் பட்ட அலங்காரங்களும் என்றவாறு. அவை அணியியலுட் காண்க.” “இனிச் செய்யுளாவன : ‘செய்யு டாமே மெய்யுற விரிப்பிற் றனிநிலைச் செய்யுட் டொடர்நிலைச் செய்யுள் அடிபல தொடுத்த தனிப்பாச் செய்யுள் உரையிடை மிடைந்த பாட்டுடைச் செய்யுள் இசைநுவன் மரபி னியன்ற செய்யுள் நயநிலை மருங்கிற் சாதியொடு தொகைஇ யவையென மொழிப வறிந்திசி னோரே’ என்றோதப்பட்ட வெல்லாம் அணியியலுட் காண்க.” (யாப்பருங்கலம், ஒழிபியல், ‘மாலை மாற்றே’ என்னும் சூத்திர உரை மேற்கோள்.) “இனி, இருது ஆவன: ‘காரே கூதிர் முன்பனி பின்பனி சீரிள வேனில் வேனி லென்றாங் கிருமூ வகைய பருவ மவைதாம் ஆவணி முதலா விவ்விரண் டாக மேவின திங்க ளெண்ணினர் கொளலே.’ இந்த இருது வருணனை அணியியலுட் காண்க.” (யாப்பருங்கலம், ஒழிபியல், ‘மாலைமாற்றே’ என்னும் சூத்திர உரைமேற்கோள்’) |