பக்கம் எண் :

மறைந்துபோன தமிழ் நூல்கள்217

“அணியியலுடையாரும்.

‘இயன்ற செய்யுட் கியைந்த பொருளை
யுயர்ந்த நடையா லுணரக் கூறலு
மருங்கல மொழியா லரிதுபடக் காட்டலு
மொருங்கிரண் டென்ப வுயர்நடைப் பொருளே’

என்னுஞ் சூத்திரத்துள் ‘ஒருங்கிரண்டு’ என்புழி யாற்றலாற் போந்த பொருளை, ‘என்ப’ வென்று முற்றுச் சொல்லோடு புலவர் என்னும் பெயர் கூட்டிப் பொருளுரைத்தாராகலின்.

இதனால், அணியியல் என்னும் நூலுக்கு ஒர் உரை இருந்தது என்பது தெரிகிறது.

நேமிநாத உரையாசிரியர் அணியியலிலிருந்து காட்டும் சூத்திரங்கள் இவை:

“புனையுறு செய்யுட் பொருளை யொருவழி
வினைநின்று விளக்கின்று விளக்கெனப் படுமே.”

“முதலிடை கடையென மூவகை யான.”

(நேமி., எழுத்து., 4ஆம் செய்யுளுரை, 20 ஆம் செய்யுளுரை)

4 அவிநயம்

அவிநயம் என்னும் பெயரையுடைய ஒருநூல் இருந்த தென்பது. தக்கயாகப் பரணி உரையினாலும், யாப்பருங்கல விருத்தியுரையி னாலும், யாப்பருங்கலக் காரிகை யுரையினாலும், வீரசோழிய உரையி னாலும், பன்னிரு பாட்டியலினாலும் தெரிகிறது.

அவிநயனார் என்பவர் இயற்றியதாகலின் இதற்கு அவிநயம் என்னும் பெயர் ஏற்பட்டது. அவிநயனார் யாப்பு என்றும் இதற்கு வேறு பெயர் உண்டு.

இது கடைச்சங்க காலத்துக்குப் பிற்பட்ட நூல். கி.பி. 5 அல்லது 6ஆவது நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கக் கூடும். யாப்பருங்கலம், யாம்பருங்கலக் காரிகை, வீரசோழியம் என்னும் நூல்கள் இயற்றப்படு வதற்கு முன்னே, அதாவது, கி.பி. 10ஆம் நூற்றாண்டுவரையில் இந்நூல் பெரிதும் பயிலப்பட்டுவந்தது என்பது தெரிகிறது.