பக்கம் எண் :

234மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15

‘இருதலைக் காம மன்றிக் கைக்கிளை
யொருதலைக் காம மாகக் கூறிய
விலக்கண மரபி னியல்புற நாடி
யதர்ப்பட மொழிந்தனர் புலவ ரதுவே
பெறுதி வெண்பா வுரித்தாய் மற்றதன்
இறுதி யெழுசீ ராசிரி யம்மே.’

‘வெண்பா வாசிரி யத்தாய் மற்றதன்
இறுதி யெழுசீ ராசிரி யம்மே.’

‘கைக்கிளை யாசிரியம் வருவ தாயின்
முச்சீ ரெழுத்தின் றாகி முடிவடி
யெச்சீ ரானு மேகாரத் திறுமே.’

இது கடிய நன்னியார் செய்த கைக்கிளைச் சூத்திரம்.”

யாப்பருங்கலம், செய்யுளியல் 18ஆம் சூத்திர விருத்தியுரையில் உரையாசிரியர், கடிய நன்னியாரை மேற்கோள் காட்டுகிறார். அது :

“கைக்கிளைப் பொருள்மேல் ஆசிரியம் வரும்வழி எருத்தடி முச்சீரான் வரப்பெறா வென்பர் கடிய நன்னியார் எனக் கொள்க. என்னை?

‘கைக்கிளை மருட்பா வாகி வருகா
லாசிரியம் வருவ தாயின் மேவா
முச்சீ ரெருத்திற் றாகி முடியடி
யெச்சீ ரானு மேகாரத் திறுமே.’

என்றாகலின்.”

கடிய நன்னியாரைப் பற்றியும், அவர் இயற்றிய கைக்கிளைச் சூத்திரத்தைப் பற்றியும் வேறு செய்திகள் தெரியவில்லை.

9. கவிமயக்கறை

இப்பெயரையுடைய நூல் ஒன்று இருந்ததென்பது யாப்பருங்கல விருத்தியினால் தெரிகிறது. யாப்பருங்கலம், ஒழிபியல், “மாலைமாற்றே சக்கரஞ் சுழிகுளம்” என்னும் சூத்திர உரையில், ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி என்னும் நான்குவகைக் கவிகளைப் பற்றி எழுதியபின், “ஒழிந்த விகற்பங்கள் கவிமயக்கறையுள்ளும் பிற வற்றுள்ளுங் கண்டுகொள்க” என்று எழுதுகிறார் உரையாசிரியர்.