பக்கம் எண் :

மறைந்துபோன தமிழ் நூல்கள்233

“நாலசைச்சீர் வெண்பாவி னண்ணா வயற்பாவி
நாசைச்சீர் நேரீற்று நாலிரண்டா - நாலசைச்சீர்
ஈறுநிரை சேரி னிருநான்கும் வஞ்சிக்கே
கூறினார் தொல்லோர் குறித்து.”     5

(யாப்பருங்கலம், சீரோத்து உரை மேற்கோள்)

யாப்பருங்கல விருத்தியுரைகாரர் இவைபோன்று வேறு சில வெண்பாக்களையும் தமது உரையில் மேற்கோள் காட்டிச் செல்கிறார். அவையும் நாலடி நாற்பது என்னும் நூலைச் சேர்ந்தனவாயிருக்கக் கூடும் என்று தோன்றுகின்றது. ஆனால், அச்செய்யுள்கள் எந்த நூலைச் சேர்ந்தவை என்பதை உரையாசிரியர் குறிக்காதபடியால், அவை நாலடி நாற்பதைச் சேர்ந்த வெண்பாக்கள்தாமா என்னும் ஐயம் உண்டாகிறது.

நன்னூல் உரையாசிரியராகிய மயிலைநாதர் நாலடி நாற்பது என்னும் அவிநயப் புறனடை நூலிலிருந்து இரண்டு குறட்பாக்களை மேற்கோள் காட்டுகிறார். அவை :

“‘தன்னை யுணர்த்தி னெழுத்தாம் பிறபொருளைச்
சுட்டுதற் கண்ணேயாஞ் சொல்.’     1

(நன்னூல், பதவியல், 1, உரை மேற்கோள்)

‘றனழஎ ஒவ்வுந் தனியு மகாரமுந்
தன்மைத் தமிழ்பொது மற்று.’     2

என்றார் ஆசிரிய ரவிநயனார்.”

(நன்னூல், பதவியல், 23, உரை மேற்கோள்)

8. கடிய நன்னியார் கைக்கிளைச் சூத்திரம்

கடிய நன்னியார் என்னும் புலவர் கைக்கிளைச் சூத்திரம் என்னும் நூலை இயற்றினார் என்பது, யாப்பருங்கல விருத்தியுரை யினால் தெரிகிறது. யாப்பருங்கலம், செய்யுளியல், 2ஆம் சூத்திர விருத்தியுரையில் உரையாசிரியர், கடிய நன்னியார் கைக்கிளைச் சூத்திரங்களை மேற்கோள் காட்டுகிறார் :

“கைக்கிளையும், வெண்பா முதலாய் ஆசிரியம் ஈறாய் வருகின்றுழி ஆசிரியவடி இரண்டேயாய், அவற்று ளீற்றடி நாற்சீரா யீற்றயலடி முச்சீரானே வருவதெனக் கொள்க. என்னை?