| 254 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
(தொல்., பொருள்., மரபு 95 ஆம் சூத்திர உரை.) இதனால், காக்கைபாடினியார் என்னும் பெயருள்ள புலவர் இருவர் தம் பெயரால் காக்கைபாடினியம் என்னும் பெயருள்ள இலக்கண நூல்களைச் செய்தனர் என்பதும், அவர்களில் ஒருவர் தொல்காப்பியர் காலத்திலிருந்தவர், மற்றவர் குமரியாறு கடல் கொள்ளப்பட்ட காலத்தில் (பல நூற்றாண்டுகளுக்குப் பின்) இருந்தவர் என்பதும் தெரிகின்றன. அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம், செய்யுளியல், 3ஆவது சூத்திரமாகிய ‘தாழிசை துறையே விருந்த மென்றிவை பாவினம் பாவொடு பாற்பட் டியலும்’ என்பதற்கு உரையெழுதிய விருத்தியுரைகாரர், “பாவே தாழிசை துறையே விருத்தமென நால்வகைப் பாவு நானான் காகும்” என்னும் சிறுகாக்கைபாடினியத்துச் சூத்திரத்தை மேற்கோள் காட்டுகிறார். காட்டி, மேலும் எழுதுகிறார்: “விருத்தம், துறை, தாழிசையென்று காக்கைபாடினியார் வைத்த முறைமையின் வையாது தாழிசை துறை விருத்தமென்று தம் (அமிதசாகரர்) மதம்பட வைத்ததன்று; சிறு காக்கைபாடினியார் முதலாகிய ஒருசாராசிரியர் வைத்த முறைமைபற்றி வைத்தாரென்க.” இந்நூலைப் பற்றிய வேறு செய்திகள் தெரியவில்லை. யாப்பருங்கல விருத்தியுரைகாரர் கீழ்க்காணும் சிறுகாக்கை பாடினியச் சூத்திரங்களைத் தமது விருத்தியுரையில் மேற்கோள் காட்டுகிறார்: “குறிய நெடிய வுயிருறுப் புயிர்மெய் வலிய மெலிய இடைமை யளபெடை மூவுயிர்க் குறுக்கமு மாமசைக் கெழுத்தே. 1 தனிநெடி லாகியுந் தனிக்குறி லாகியு மொற்றொடு வந்தும் நேரசை யாகும். 2 குறிலிணை யாகியுங் குறிநெடி லாகியு மொற்றொடு வந்தும் நிரையசை யாகும். 3 |