| மறைந்துபோன தமிழ் நூல்கள் | 263 |
23. நத்தத்தனார் இயற்றி நத்தத்தம் நத்தத்தனார் என்னும் பெயருள்ள புலவர் ஒருவர் தம் பெயரால் நத்தத்தம் என்னும் யாப்பிலக்கண நூல் ஒன்றைச் செய்தார் என்பதும், யாப்பருங்கலக்காரிகை யுரையாசிரியர் குணசாகரரும், யாப்பருங்கல விருத்தியுரைகாரரும் தத்தம் உரைகளில் கூறுவதிலிருந்து தெரிகிறது. ‘ந’ என்னும் சிறப்பெழுத்தோடு இவர் பெயர் வழங்கப்படுவதனால், இவர் புலவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர் என்பதும் தெரிகிறது. இவர் பெயர் சில சமயங்களில் நற்றத்தனார் என்றும் கூறப்படுகிறது. இவர் இயற்றிய நந்தத்தம் என்னும் நூலுக்கு அடிநூல் என்னும் பெயரும் வழங்கியதுபோலும். என்னை? “‘ஐஞ்சீ ரடுக்கலு மண்டில மாக்கலும் வெண்பா யாப்பிற் குரிய வல்ல’8 என்று நத்தத்தனார் அடிநூலுள் எடுத்தோதினார்.” என்று உரையாசிரியர் குணசாகரர் (யா., காரிகை, 39 உரை) கூறுவது காண்க. மேலும், குணசாகரர், நத்தத்தனார் நூலைப் பற்றி (25ஆம் காரிகையுரை) இவ்வாறு கூறுகிறார்: “மாவாழ் சுரம், புலிவாழ் சுரம் என்னும் வஞ்சியுரிச்சீரி ரண்டும் உளவாக வைத்து, ஒருபயனோக்கி ஊஉமணி கெழூ உமணி என்றளபெடுத்து நேர்நடுவாகிய வஞ்சியுரிச்சீர்க்கு உதாரணம் எடுத்துக் காட்டினார் நத்தத்தனார் முதலாகிய ஒருசாராசிரியர்.” நத்தத்த நூலிலிருந்து குணசாகரர் கீழ்க்காணும் சூத்திரங்களைத் தமது உரையில் மேற்கோள் காட்டியுள்ளார்: “அளபெடைத் தொடைக்கே யளபெடை யொன்றும். 1 வெண்பா விரவினுங் கடிவரை யின்றே. 2 ஐஞ்சீ ரடுக்கலு மண்டில மாக்கலும் வெண்பா யாப்பிற் குரிய வல்ல.” 3 யாப்பருங்கல வுரையாசிரியர் பின்வரும் நத்தத்தச் சூத்திரங்களைத் தமது உரையில் மேற்கோள் காட்டுகிறார்: “யாப்பெனப் படுவ தியாதென வினவிற் றூக்குந் தொடையும் அடியுமிம் மூன்றும் நோக்கிற் றென்ப நுணங்கி யோரே. 1 |