பக்கம் எண் :

மறைந்துபோன தமிழ் நூல்கள்265

விகற்பங் கொள்ளா ரடியிறந்து வரினே.     16

ஒத்தா ழிசைக்கலி கலிவெண் பாட்டே
கொச்சகக் கலியொடு கலிமூன் றாகும்.     17

உரையு நூலு மடியின்றி நடப்பினும்
வரைவில வென்ப வயங்கி யோரே.     18

வாய்மொழி பிசியே முதுசொல் லென்றாங்
காமுரை மூன்று மன்ன வென்ப.     19

தானே யடிமுதற் பொருள்பெற வருவது
கூனென மொழிப குறியுணர்ந் தோரே.     20

வஞ்சி யாயி னிறுதியும் வரையார்.     21

கலித்தளை யடிவயி னேரீற் றியற்சீர்
நிலைக்குரித் தன்றே தெரியு மோர்க்கே
வஞ்சி மருங்கினு மிறுதி நில்லா.     22

குன்றியுந் தோன்றியும் பிறிதுபிறி தாகியும்
ஒன்றிய மருங்கினு மொருபுடை மகார
மசையுஞ் சீரு மடியு மெல்லாம்
வகையுளி சேர்த்தல் வல்லோர் மேற்றே.     23

சீரா கிடனு முரியசை யுடைய
நேரீற் றியற்சீ ரவ்வயி னான.”     24

24. நல்லாறன் மொழிவரி

இப்பெயருள்ள செய்யுள் இலக்கண நூல் ஒன்று இருந்த தென்பது யாப்பருங்கல விருத்தியுரையினால் தெரிகிறது. யாப்பருங்கல ஒழிபியலில், “இடைச்சொல்லும் உரிச்சொல்லும் தொல்காப்பியம், தக்காணியம், அவிநயம், நல்லாறன் மொழிவரி முதலியவற்றுட் காண்க.” என்று உரையாசிரியர் எழுதுவதிலிருந்து இதனை அறியலாம். மேலும், இந் நூலிலிருந்து நான்கு சூத்திரங்களை இவ்வுரையாசிரியர் தமது உரையில் மேற்கோள் காட்டுகிறார். நல்லாறன் என்னும் பெயர் நல்லாதன் என்றும் பாடபேதம் காணப்படுகிறது. ஆகவே, இந்நூலாசிரி யர் பெயர் நல்லாறனா அல்லது நல்லாதனா என்பது உறுதியாகக் கூற முடியவில்லை. ஆனால், நல்லாறன் என்றும் பெயரே பலமுறை கூறப்