பக்கம் எண் :

  

கைதை - கேதகீ

கைதை என்றால் தாழை என்பது பொருள். கைதையாகிய தாழை நெய்தல் நிலத்தை (கடற்கரையை) அடுத்த நிலங்களில் வளர்கிறது. கைதை என்னுஞ் சொல் சங்க இலக்கியங்களிலே பயின்றுள்ளன. உதாரணமாக:

‘கைதையம் படுசினைக் கடுந்தேர் விலங்கச்
செலவரிது என்றும்’

- (அகம் 210: 12-13.)

‘நீனிறப் புன்னை தமியொண் கைதை

- (நற் 235:2)

‘கைதை வேலி நெய்தலங்கானல்’

- (சிலம்பு 6: 150)

‘கைதை வேலிக் கழிவாய் வந்தெம்
பொய்த லழித்துப் போனார் ஒருவர்’

(சிலம்பு கானல்வரி 43: 1-2)

‘கோடல் கைதை கொங்கு முதிர் நறுவழை’

(குறிஞ்சிப்பாட்டு 83)

‘கைதையத் தண்புனற் சேர்ப்பன்’

- குறும் (304:7)

தாழை என்னும் பொருளுள்ள கைதை என்னுஞ் சொல் கைதல் எனவும் வழங்கப்பட்டது. இது தமிழில் மட்டும் அல்லாமல் ஏனைய திராவிட இனமொழிகளிலும் வழங்குகிறது. மலையாள மொழியில், தாழையின் ஒரு இனத்துக்குக் கைத (கைதை) என்று இன்றும் பெயர் வழங்கப் படுகிறது.

இன்னொரு திராவிட இனமொழியாகிய துளு மொழியில், கைதை என்னுஞ் சொல் கேதை, கேதயி, கேதாயி என்று திரிந்து வழங்கப் படுகிறது. மற்றொரு திராவிட மொழியாகிய கன்னட மொழியில் இச் சொல் கேதகெ என்றும்கேதிகெ என்றும் வழங்குகிறது, தெலுங்கு மொழியிலும் இச்சொல் கேதாகி(gedagi) என்று வழங்கி வருகின்றது..