பக்கம் எண் :

84மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 19

‘விசும்பே உடம்பு’ என்றார் சேரமான் பெருமாள் நாயனார்.2

ஆகவே, மனித உடல் கற்பிக்கப்பட்ட தாண்டவ மூர்த்தியின் உண்மை உருவம் ஆகாயம் என்பது அறியத்தக்கது. (கடவுளுக்கு ஆண் உருவம் கற்பிக்கப்பட்டது போலவே அவரது ஆற்றலுக்குப் (சக்திக்குப்) பெண் உருவம் கற்பிக்கப்பட்டது).

திருக்கைகள்

தாண்டவப் பெருமானுக்கு நான்கு திருக்கைகள் கற்பிக்கப் பட்டுள்ளன. எட்டு, பத்து, பதினாறு கைகள் கற்பிக்கப்படுவதும் உண்டு. கைகள், திசைகளைக் குறிக்கின்றன. ஆகாயத்தை உடம்பாகக் கொண்ட கடவுளுக்குத் திசைகள் கைகளாக உள்ளன. ‘திசைகள் எட்டும் திருக்கைகள்’ என்பது திருமந்திரம். ‘பத்துத் திசைகளும் பத்துக் கைகளாகும்’ என்பது காமிகாகமம்3 ‘திசை தோள்’ என்றார் சேரமான் பெருமாள் நாயனார்.4 ‘எண்டிசை எண்டோள்’ என்றார் பட்டினத்து அடிகள்.5

பரந்து விரிந்துள்ள பெரிய ஆகாயம் கடவுளின் திருமேனியாகக் கற்பிக்கப்பட்டது. திசைகள் (நான்கு, எட்டு, பத்து, பதினாறு திசைகள்) கடவுளின் கைகளாகக் கற்பிக்கப்பட்டன. சைவசமயத்தாரும் வைணவ சமயத்தாரும் சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் இவ்வாறு உருவம் கற்பித்தார்கள். உருவம் இல்லாமல் அரூபியாக இருக்கும் கடவுளுக்கு உருவத்தைக் கற்பித்தபோது, அந்த உருவத்தை மனித உருவமாகக் கற்பித்தார்கள். இந்தக் கற்பனை. உருவம் கடவுளை வணங்குவதற்கு ஓர் அடையாள உருவம் என்று கருதவேண்டும்.

நற்றிணை என்னும் தொகை நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியபெருந்தேவனார், ஆகாயத்தைத் திருமாலின் திருமேனி யாகவும், சூரியசந்திரர்களை அவருடைய கண்களாகவும், திசைகளை அவருடைய கைகளாகவும், கடல் நீரை அவருடைய ஆடையாகவும் நிலத்தை அவருடைய கால்களாகவும் கூறுகிறார்.

“ மாநிலஞ் சேவடி யாகத், தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கை யாக,
விசும்புமெய் யாகத், திசைகை யாகப்,
பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக
இயன்ற வெல்லாம் பயின்றகத் தடக்கிய