பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்113

  ஈறிலாச் சகரர் எண்ணில ராமெனப்
பொன்னேர் பூட்டி நின்றவர் தம்மைப்
 130போற்றிய குரவையே பொலிதரு மொருசார்;
சேற்றிடை யடர்ந்த நாற்றடைத் தெடுக்குநர்
நாறுகூ றாக்குநர் வேறுபுலம் படுக்குநர்
நடுபவர் களைப்பகை யடுபவ ராதியாக்
கள்ளுண் கடைசியர் பள்ளும் பாட்டும்
 135தருமொலி பரந்தே தங்குவ தொருசார்;
குன்றென அரிந்து குவித்திடுஞ் செந்நெற்
போர்மிசைக் காரா காரெனப் பொலியக்
கறங்குங் கிணைப்பறை முழவுடன் பிறங்கும்
மங்கல வொலியே மல்குவ தொருசார்;
 140தூவியால் தம்முடல் நீவிடில் சிரிக்குஞ்
சிறுமிய ரென்ன அச் செழுநில நங்கை
உழுபடைக் கொழுமுனை தொடுமுனங் கூசி
உடல்குழைந் தெங்கும் உலப்பறு செல்வப்
பயிர் மயிர் சிலிர்த்துப் பல்வளம் நகுவள்,
 145எனிலினி யானிங் கியம்புவ தென்னை?
அனையவந் நாடெலாம் அரச! மற் றுனக்கே
உரித்தென அங்குள பாடையே உரைக்கும்.


ஈறிலா - முடிவு இல்லாத. சகரர் - சகர சக்கரவர்த்தியின் பிள்ளைகள். 128-129 அடிகள், சகர சக்கரவர்த்தியின் பிள்ளைகள் நிலத்தை உழுதது போல, உழவர் ஏரைப் பூட்டி உழுதனர் என்பது கருத்து. சகர குமரர்கள் நிலத்தை ஆழமாக உழுதபடியால் சாகரம் (கடல்) உண்டாயிற்று என்பது புராணக் கதை. பொன் ஏர் - அழகான ஏர். குரவை - குரவைப் பாட்டு. இது குரவைக் கூத்து ஆடும்போது பாடும் பாட்டு. நாறு - நாற்று. களைப் பகை - களையாகிய பகையை. அடுபவர் - கெடுப்பவர், கொல்பவர். கடைசியர் - வயல்வேலை செய்யும் பெண்கள். பள்ளு - ஒருவகைப் பாட்டு. தமிழ்ப் பிரபந்த நூல்களில் ஒன்று. கிணைப்பறை - மருத நிலத்துப் பறை. தூவி - இறகு. நீவுதல் - தடவுதல். உலப்பறு - வற்றாத, குறையாத. பாடை - பாஷை, மொழி.

“உனக்கே உரித்தென அங்குள பாடையே உரைக்கும்” என்பது, நாஞ்சில் நாடு பாண்டியருக்கே உரியது என்பதை அந்நாட்டில்