பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்133

மூன்றாம் களம்

இடம் : திருவனந்தையிற் சேரன் அரண்மனை.

காலம் : காலை.

(புருடோத்தமன் சிந்தித்திருக்க.)

(நேரிசை ஆசிரியப்பா)

புருடோத்தமன்: (தனிமொழி)
  யார்கொலோ அறியேம்! யார்கொலோ அறியேம்!
வார்குழல் துகிலோடு சோர மாசிலா
மதிமுகங் கவிழ்த்து நுதிவேற் கண்கள்
விரகதா பத்தால் தரளநீர் இறைப்ப
 5பரிபுர மணிந்த பங்கயம் வருந்துபு
விரல் நிலங் கிழிப்ப வெட்கந் துறந்து
விண்ணணங் கனைய கன்னியர் பலரென்
கண்முன் னின்றங் கிரக்கினுங் கலங்காச்
சித்தம் மத்துறு தயிரில் திரிந்து
 10பித்துறச் செய்தவிப் பேதை யார்கொலோ?
எவ்வுல கினளோ? அறியேம். இணையிலா
நல்வியும் நண்பும் நலனு முடையவள்
யார்கொலோ? நாள்பல வானவே. ஆ! ஆ!
விழிப்போ டென்கண் காணில்! - வீண்! வீண்!
 15பழிப்பாம் பிறருடன் பகர்தல். பகர்வதென்?


1 முதல் 44 வரிகளில், புருடோத்தமன் கன்னிகை ஒருத்தியைக் கனவில் கண்டு காதல் கொண்டு அவளைப்பற்றித் தன் மனத்தில் சிந்திப்பது கூறப்படுகிறது.

வார்குழல் - நீண்ட கூந்தல். துகில் - ஆடை, உடை. நுதிவேல்- கூர்மை யான வேல். விரகதாபம் - காதல் வேட்கை. தரளநீர்- முத்துப்போல் உதிரும் கண்ணீர். பரிபுரம் - சிலம்பு. பங்கயம் -தாமரைப்பூ போன்ற பாதம், உவமையாகுபெயர். வருந்துபு - வருந்தி. விரல் நிலம் கிழிப்ப -கால் விரலினாலே நிலத்தைக் கீற. விண் அணங்கு- தெய்வமகள். நவ்வி- அழகு. நண்பு - நட்பு, அன்பு.