பக்கம் எண் :

134மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

  கனவு பொய்யெனக் கழறுவர். பொய்யோ?
நனவினும் ஒழுங்காய் நாடொறுந் தோற்றும்
பொய்யல; பொய்யல; ஐய மெனக்கிலை.
நாடொறும் ஒருகலை கூடி வளரும்
 20மதியென எழில்தினம் வளர்வது போலும்
முதனாள் முறுவல் கண்டிலம்; கடைக்கணில்
ஆர்வம் அலையெறி பார்வையன் றிருந்தது.
நேற்றிராக் கண்ட தோற்றமென் நெஞ்சம்
பருகின தையோ! கரிய கூந்தலின்
 25சிறுசுருள் பிறைநிகர் நறுநுதற் புரளப்
பொருசிலைப் புருவம் ஒருதலை நெகிழ்த்துச்
செவ்வரி படர்ந்த மைவழி நெடுவிழி
உழுவலோ டென்முகம் நோக்க எழுங்கால்
என்னோக் கெதிர்படத் தன்னோக் ககற்றி,
 30வெய்யோன் வாரியில் விழுங்கால் துய்ய
சேணிடைத் தோன்றுஞ் செக்கர்போற் கன்னம்
நாணொடு சிவக்க, ஊர்கோள் நாப்பண்
தோன்றிய உவாமதி போன்றங் கெழிலொளி
சுற்றிய வதனஞ் சற்றுக் கவிழ்த்தி,
 35அமுதமூற் றிருக்குங் குமுதவா யலர்ந்து
மந்த காசந் தந்தவள் நின்ற
நிலைமையென் நெஞ்சம் நீங்குவ தன்றே!
தேவ கன்னியர் முதலாந் தெரிவையர்
யாவரே யாயினும் என்கண் தனக்கு
 40மைந்தரா மாற்றுமிச் சுந்தரி யார்கொலோ?
அறியுமா றிலையே! அயர்க்குமா றிலையே!
உண்டெனிற் கண்டிடல் வேண்டும். இலையெனில்
இன்றே மறத்தல் நன்றே, ஆம்! இனி
மறத்தலே கருமம். மறப்பதும் எப்படி?


முறுவல் - புன்சிரிப்பு. நெஞ்சம் பருகினது - மனத்தைக் குடித்தது. உழுவலோடு - அன்புடன். வெய்யோன் - சூரியன். வாரியின் - கடலில். செக்கர் - செவ்வானம். ஊர்கோள் - நிலாவைச் சுற்றி யிருக்கிற ஒளி வட்டம். நாப்பண் - நடுவில். உவாமதி - முழுநிலா. குமுத வாய் - ஆம்பல்போன்ற வாய். மந்தகாசம் - புன்முறுவல். அயர்க்குமாறு - மறக்கும்படி.