பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்235

  55உறையுறு குறுவாள் ஒருபுறம் அசைத்துக்
காற்றினும் மிகவும் கடுகிக் கூற்றின்
பல்லினும் கூரிய பகழி மல்கிய
தூணி தோளில் தூக்கி, நாண் நின்று
எழுமொலி உருமுபோன் றெழுப்பி ஆர்த்தவர்
 60கடிபுரி காக்குநின் காற்படை யாளர்
இருப்புக் கலினம் நெரித்துச் சுவைத்துக்
கருத்தும் விரைவு கற்கும் குரத்தால்
பொடியெழப் புடைக்கும் புரவிகள், போர்க்கு
விடைகேட் டுதடு துடித்தலும் வியப்பே.
 65நிணங்கமழ் கூன்பிறைத் துணைமருப் பசைத்து
மம்மர் வண்டினம் அரற்ற மும்மதம்
பொழியும் வாரணப் புயலினம், தத்தம்
நிழலொடு கறுவி நிற்பதும் அழகே.
முன்னொரு வழுதிக்கு வெந்நிட் டோடிய
 70புரந்தரன் கைப்படாப் பொருப்புகள் போன்ற


குறுவாள் - சிறுவாள். பகழி. - அம்பு, தூணி - அம்புகளை இட்டு வைக்கும் தூணி. நாண்நின்று - வில்லின் நாணிலிருந்து. உருமு - இடி. காற் படையாளர் - காலாள் படையினர். கலினம் - கடிவாளம். ‘கருத்தும் விரைவு’ - மனோவேகம். குரம் - குதிரையின் குளம்பு. கூன் பிறை - வளைந்த நிலாப்பிறை போன்ற. துணை மருப்பு - இரண்டு தந்தங்கள். மும்மதம் - மூன்று மதநீர். யானைகளுக்கு மூன்றுவித மதநீர் பெருகுவதால் மும்மதம் எனப் பெயர்பெற்றது. வாரணப் புயல் இனம் - மேகம் போன்று கருநிறமுள்ள யானைக் கூட்டம். வெந்நிட் டோடிய - முதுகு காட்டி ஓடின. புரந்தரன் - இந்திரன். ‘முன்னொரு வழுதிக்கு வெந்நிட்டோடிய பரந்தரன்’ என்பது, பாண்டியன் ஒருவன் இந்திரனுடன் போர் செய்து வென்ற கதையைக் குறிக்கிறது. இக் கதையைத் திருவிளையாடற் புராணம், இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலத்தில் காண்க. புரந்தரன் கைப்படாப் பொருப்புகள் - இந்திரனுடைய கைவாளினால் சிறகை இழக்காத மலைகள். முன் காலத்தில் மலைகள் சிறகு பெற்று வானத்தில் பறந்து திரிந்தன என்றும், இந்திரன் அவற்றின் சிறகுகளை வெட்டி வீழ்த்தியபடியால், அந்த மலைகள் பறக்க முடியாமல் நிலத்தில் தங்கிவிட்டன என்னும் புராணக்கதையைக் குறிக்கிறது இந்த அடி.