பக்கம் எண் :

236மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

   கொடிஞ்சி நெடுந்தேர் இருஞ்சிறை விரித்து
   “ வம்மின்! வம்மின்! வீரரே! நாமினி
இம்மெனும் முன்னமவ் விந்திர லோகமும்
செல்லுவம்! ஏறுமின்! வெல்லுவம்!” எனப்பல
 75கொடிக்கரம் காட்டி யழைப்பதும் காண்டி...
ஜீவ: கண்டோம், கண்டோம். களித்தோம் மிகவும்
உண்டோ இவர்க்கெதிர்? உனக்கெதிர்? ஓ! ஓ!
  (படைகளை நோக்கி)
   வேற்படைத் தலைவரே! நாற்படை யாளரே!
கேட்பீர் ஒருசொல்! கிளர்போர்க் கோலம்
  80நோக்கியாம் மகிழ்ந்தோம். நுமதுபாக் கியமே
பாக்கியம். ஆ! ஆ! யார்க்கிது வாய்க்கும்?
யாக்கையின் அரும்பயன் வாய்த்ததிங் குமக்கே!
தாயினும் சிறந்த தயைபூண் டிருந்தநும்
தேயமாம் தேவிக்குத் தீவினை யிழைக்கத்
  85துணிந்தவிவ் வஞ்சரை எணுந்தொறும் எணுந்தொறும்
அகந்தனில் அடக்கியும் அடங்கா தெழுந்து,
புகைந்துயிர்ப் பெறியப் பொறிகண் பொரிய
நெடுந்திரட் புருவம் கொடுந்தொழில் குறிப்ப
வளங்கெழு மீசையும் கிளர்ந்தெழுந் தாடக்
  90களங்கமில் நும்முகம் காட்டுமிச் சினத்தீ
கண்டுஅப் பாண்டியே கொண்டனள் உவகை.
அலையெறிந் தீதோ ஆர்த்தனள். கேண்மின்!
முலைசுரந் தூட்டிய முதுநதி மாதா!
படைகள்:  தாம்பிர பன்னிக்கு ஜே! ஜே!


தேர்கள் மலைகளுக்கு உவமை. கொடிஞ்சி நெடுந்தேர் - கொடிஞ்சி என்னும் உறுப்பையுடைய பெரிய தேர். நாற்படை - நான்கு விதமான படை. அவை, யானைப் படை, குதிரைப்படை, தேர்ப் படை, காலாட்படை என்பன. யாக்கை - உடம்பு. பாண்டி - பாண்டி நாடாகிய தாய். முதுநதி மாதா - தாம்பிரவர்ணி ஆறாகிய தாய்.