பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்237

ஜீவ:  ஒருதுளி யெனும்நீர் உண்டுளீர் ஆயின்
  95கருதவீர் தாம்பிர பன்னியின் கட்டுரை.
   “ மக்காள்! அருந்தி வளர்மின்! நுமக்கு
மிக்கோர் இல்லா வீரமாய்ப் பரந்து
முதுசுதந் தரத்தின் முத்திரை ஆகி,
இதுபரி ணமித்துஉம் இதயத் துறைக!
  100அன்னியன் கைப்படா இந்நீர் கற்பிற்கு
இழிவுறின் மார்பினின் றிதுவே சோரியாய்ப்
பொழிகநீர் பொன்றிடும் அளவும்!” என்றன்றோ
வாழ்த்தி நுந்தமை வளர்த்தினள்? அவளுரை
தாழ்த்தா திவணீர் போர்த்தபோர்க் கோலம்
  105பார்த்தாள் ஆர்த்தவள் வாழ்த்தா தென்செய்வள் !
படைகள்: ஜே! ஜே!
ஜீவ:  விந்தம் அடக்கினோன் தந்தநற் றமிழ்மொழி
தற்சுதந் தரமறும் அற்பர்வாய்ப் படுமோ?
படைகள்: தமிழ்மொழிக்கு ஜே! ஜே!
ஜீவ:  பழையோர் பெருமையும் கிழமையும் கீர்த்தியும்
மன்னிய அன்பின்நும் அன்னையர் பாடி
  110நித்திரை வரும்வகை ஒத்தறுத் துமது
தொட்டில்தா லாட்ட, அவ் இட்டமாம் முன்னோர்
தீரமும் செய்கையும் வீரமும் பரிவும்
எண்ணி இருகணும் கண்ணீர் நிறையக்
கண்துயி லாதுநீர் கனிவுடன் கேட்ட


சோரி - இரத்தம். பொன்றிடும் அளவும் - சாகிற வரையில். விந்தம் அடக்கியோன் - விந்திய மலையைத் தாழச் செய்தவனாகிய அகத்தியன். முற்காலத்தில் விந்திய மலை உயர்ந்து இறுமாப் படைந்திருந்தது என்றும், அவ்வழியாக வந்த அகத்திய முனிவர் அதன் தலையில் தன் கையை வைத்துச் சிறிதாக அடக்கினார் என்றும் புராணம் கூறம். தந்தநற்றமிழ்மொழி - அகத்தியன் முதலில் இலக்கணம் எழுதி அமைக்கப்பட்ட தமிழ்மொழி. கிழமை - உரிமை. ஓத்தறுத்து - தாளம் பிடித்து.