பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்281

ஐந்தாம் களம்

இடம் : அரண்மனையில் ஒருசார்.

காலம் : மாலை.

(ஜீவகனும் சுந்தரமுனிவரும் மந்திராலோசனை)

(நேரிசை ஆசிரியப்பா)

சுந்தரர்: வளையும்வேய் நிமிரும்; வளையா நெடுமரம்
கிளையுடன் கெடுமே கிளர்காற் றதனில்!
ஜீவகன்: முளையுமோர் மரமோ? முனிவ! புல்லினம்
களைகுவர், களைகிலர் காழ்பெறும் தருக்கள்.
 5சேணுயர் தேக்கு திசையெறி சூறையில்
ஆணிவே ருடனெழுந் ததிர்ந்தசைந் திறினும்
பேணுவர் அதனைப் பெரியோர்! யாரே
காணுவர் காழறு நாணமில் நாணலை?
ஓருயிர்ப் பேனும் உண்டேல், அடிகாள்!
 10போரிடைப் போக்குவன்; புகழெனக் கதுவே!
சுந்: பொறுபொறு! ஜீவக! வெறுமொழி புகலேல்!
அரியது செய்வதே ஆண்மையும் புகழும்!
அரிதுயிர் தரித்தலோ மரித்தலோ அறைதி.
வேட்டையா ரோட்டிட வெருவுதீக் குருவி
 15நீட்டிய தன்சிர நீள்மணற் புதைத்துத்
தனதுகண் காணாத் தன்மையாற் பிறரும்
தனதுடல் காணார் எனநினை வதுபோல்
என்னையில் மயக்கம் மன்னவ! உனக்கும்!


வேய் - மூங்கில். கிளர் காற்று - மேலெழுகின்ற காற்று முளை - மூங்கில். காழ் பெறும் - வயிரம் பெற்றுள்ள. தருக்கள் மரங்கள். இறினும் - முறிந்தாலும். காழ் அறும் - வயிரம் இல்லாத. தீக்குருவி -நெருப்புக்கோழி.